சர்வதேச சிறுவர் தினமான நேற்று காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் யாழில் ஆர்ப்பாட்டம்

 

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் நேற்று போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. யாழ் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (01) காலை வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகளின் அமைப்பினரால் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, பஸ் நிலையத்திலிருந்து பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்துக்கு முன்பாக போராட்டத்தை நிறைவு செய்தனர். இதன்போது காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

காணாமலாக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கோரியும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் சிறுவர்களை வேலைக்கமர்த்துதல் உள்ளிட்டவற்றை கண்டித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட உறவுகளுடன் கொண்டு செல்லப்பட்ட எமது சிறுவர்கள் எங்கே, இராணுவத்தினராலும், துணை இராணுவ குழுக்களினாலும் கொண்டு செல்லப்பட்ட எமது சிறுவர்கள் எங்கே? என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது கோஷமெழுப்பினர்.

இதேநேரம், இன அழிப்பு குற்றங்களுக்கு உள்ளக விசாரணையை நிராகரிப்பதாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினூடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

 

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

Fri, 10/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை