ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிபட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது டெல்லி அணி

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 30ஆவது லீக் போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணி 13 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. டுபாயில் (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணியும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெபிடல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெபிடல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஷிகர் தவான் 57 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஸ்ரேயஸ் ஐயர் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சில், ஜொப்ரா ஆர்செர் 3 விக்கெட்டுகளையும், ஜெய்தேவ் உனட்கட் 2 விக்கெட்டுகளையும், கார்திக் டியாகி மற்றும் ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 162 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது. இதனால் டெல்லி கெபிடல்ஸ் அணி 13 ஓட்டங்களால் வெற்றியை பதிவுசெய்தது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, பென் ஸ்டோக்ஸ் 41 ஓட்டங்களையும், ரொபின் உத்தப்பா 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். டெல்லி கெபிடல்ஸ் அணியின் பந்துவீச்சில், தேஸ்பாண்டே மற்றும் நோட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ரபாடா, அஸ்வின் மற்றும் அக்ஸர் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, பட்லர் மற்றும் உத்தப்பாவை போல்ட் முறையில் ஆட்டமிழக்க செய்த நோட்ஜே தெரிவுசெய்யப்பட்டார்.

Fri, 10/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை