சுகாதார நடைமுறைகளை சபாநாயகரும் மீறியுள்ளார்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சபையில் சாடல்

பாராளுமன்றத்திற்குள் சமூக இடைவெளிளையும் முகக்கவசங்களையும் எவரும் அணியவில்லை. சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ள விடயங்கள் பாராளுமன்றத்திற்கு பொருந்தாதா?. பாராளுமன்றத்திற்குள் ஒரு சட்டமும் பாராளுமன்றத்திற்கு வெளியில் ஒரு சட்டமும் பின்பற்றப்படுகிறதா? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார். எதிர்க்கட்சித் தலைவரின் கேள்வியால் ஆளும் எதிர்தரப்புகளுக்கும் இடையில் சபையில் கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டன. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10 பத்து மணிக்கு கூடியது. இதன்போது விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

சுகாதார அமைச்சர் கடந்த 15ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தார். வர்த்தமானியின் பிரகாரம் அனைத்து சந்தர்ப்பங்களில் முகக்கவசங்கள் அணிந்திருக்க வேண்டும் என்பதுடன், இருவருக்கு இடையிலான சமூக இடைவெளி குறைந்தது ஒரு மீற்றராவது பேணப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தை மீறுவது என்பது நோய் தடுப்பு சட்டத்தின் பிரகாரம் தண்டனைக்குரிய குற்றமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஆறுமாதகாலம் வரை சிறை தண்டனையும் 10,000 ரூபாவுக்கு அதிகமாகத தண்டப்பணத்தை விதிக்கவும் முடியுமென கூறப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் கூடியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் சமூக இடைவெளியை பேணுதல் மற்றும் முகக்கவசங்களை அணியும் சுகாதார வழிகாட்டல்களை எவரும் பின்பற்றவில்லை. நாட்டில் சட்டங்களை உருவாக்கும் உயரிய சபையில் உருவாக்கப்பட்ட சட்டங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றவில்லை. இங்கு சட்டம் மீறப்படுகிறது. சபாநாயகர்கூட முகக்கவசத்தை அணியாதுள்ளார். சபாநாயகரும் சட்டத்தை மீறுகிறார். உருவாக்கப்பட்டுள்ள சட்டங்கள் பாராளுமன்றத்தில் ஒருவிதத்திலும் பாராளுமன்றத்துக்கு வெளியில் ஒருவிதத்திலும் நடைமுறைப்படுத்தப்படுகிறதா?.

சுற்றுநிரூபத்தில் உள்ள வழிகாட்டல்களின் பிரகாரமும் சமூக இடைவெளியை பேணும் வகையிலும் சபையில் கதிரைகள் ஒழுங்கமைக்கப்பட்டு பாராளுமன்ற செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வோம் என்றார்.

சஜித் பிரேமதாசவின் கேள்விக்கு அரச தரப்பின் சார்பில் பதிலளித்த அமைச்சர் தினேஸ் குணவர்தன, பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பு சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர் கூட்டம் நடைபெற்றது.

இதில் எதிர்க்கட்சித் தலைவர்களை போன்று ஆளுங்கட்சி பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இதன்போது பாராளுமன்ற செயற்பாடுகளை எவ்வாறு கொண்டுசெல்வதென தீர்மானிக்கப்பட்டது. இதற்கு இணக்கத்தை வெளியிட்ட பின்னர்தான் கட்சித் தலைவர் கூட்டம் முடிவடைந்தது என்பதை எதிர்க்கட்சித் தலைவருக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறேன் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன் 

Wed, 10/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை