கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 46ஆவது லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

சார்ஜாவில் திங்கட்கிழமை நடைபெற்ற இப்போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சுப்மான் கில் 57 ஓட்டங்களையும், ஓய்ன் மோர்கன் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஷமி 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் ஜோர்தான் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், கிளென் மேக்ஸ்வெல் மற்றும் முருகன் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 150 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 18.5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனால் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மந்தீப் சிங் ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களையும், கிறிஸ் கெய்ல் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கொல்கத்தா அணியின் பந்துவீச்சில், வருண் சக்கரவர்த்தி மற்றும் லொக்கிபெர்குசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 29 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 2 பவுண்ரிகள் அடங்களாக 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட கிறிஸ் கெய்ல் தெரிவு செய்யப்பட்டார்.

Wed, 10/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை