மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவு இன்று (25) காலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகயாக பிரகனப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குடட்ட மீன் வியாபாரிகள் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஏனைய மக்களை பாதுகாக்க வேண்டியே இத் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து நேற்று (24) வாழைச்சேனை துறைமுகம் மூடப்பட்டிருந்தது.
குறித்த துறைமுகத்துடன் தொடர்புபட்ட மீன் வியாபாரிகள் பேலியகொடை மீன் சந்தைக்கு வாகனத்தில் மீன் விற்கச் சென்று வந்துள்ளமை அடையாளம் காணப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அவர்களில் பதினொரு பேர் கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது வாழைச்சேனை போலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் திறக்கபட்டிருந்த வர்த்தக நிலையங்களை பாதுகாப்புப் படையினர் மூடியதுடன், அநாவசியமாக நடமாடும் பொதுமக்களை பாதுகாப்புப் படையினர் எச்சரித்து வீடுகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
அத்தோடு, குறித்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சுகாதாரப் பிரிவினர்களுக்கும் பாதுகாப்புப் படையினர்களுக்கும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு பிரதேச பள்ளிவாசல்களில் அறிவித்தல் விடுக்கப்பட்டு வருவதோடு, வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் அறிவித்தல் விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பொலிஸார், இராணுவத்தினர்கள் கடமையில் ஈடுபட்டு வருவதோடு வீதி ரோந்து நடவடிக்கையையும் முன்னெடுத்து வருகின்றனர்.
(எச்.எம்.எம். பர்ஸான்)
from tkn