ரொஹிங்கிய படுகொலைகள் தொடர்பில் இரு மியன்மார் படை வீரர்கள் ஒப்புதல்

மியன்மார் இராணுவத்தில் இருந்து வெளியேறிய இரு வீரர்கள், தாம் கண்ணில்பட்ட ரொஹிங்கிய முஸ்லிம்களை சுட்டுக்கொன்றதாகவும் அவர்களின் உடல்களை பாரிய புதைகுழிகளில் புதைத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்த இரு இராணுவ வீரர்களும் வாக்குமூலம் அளிக்கும் வீடியோ இராணுவத்துடன் போரிட்டு வரும் அரகான் படை என்று அழைக்கப்படும் கிளர்ச்சியாளர்களால் கடந்த ஜூலை மாதம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதனை அரச சார்பற்ற அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

“டவுங் பசார் கிராமத்திற்கு அருகில் இருக்கும் முஸ்லிம் கிராமங்களை நாம் அழித்தோம். கண்ணில்பட்ட காதால் கேட்கின்ற அனைவரையும் சுடும்படி கிடைத்த உத்தரவுக்கு அமைய இரவில் நாம் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டோம். ஒரு புதைகுழியில் 30 உடல்களை நாம் புதைத்தோம்” என்று அந்த வீடியோவில் தோன்றிய ம்யோ வின் டுன் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பல பெண்கள் கற்பழிக்கப்பட்டது தொடர்பிலும் இந்த இராணுவ வீரர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இராணுவத்தின் தமது சக வீரர்கள் பெண்களை கற்பழித்து விட்டு பின்னர் கொன்றதாகவும் தாமும் ஒரு பெண்ணை அவ்வாறு செய்ததாகவும் ம்யோ வின் டுன் குறிப்பிட்டுள்ளார். “நாம் கிராமம் கிராமமாக ஆட்களை கொன்று புதைத்துக்கொண்டு சென்றோம். அது மொத்தம் 60 தொடக்கம் 70 பேர்கள் இருப்பார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த இரு வீரர்களும் தற்போது ஹேகில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. ரொஹிங்கிய விவகாரம் தொடர்பில் அந்த நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2017இல் மியன்மாரில் ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக 740,000க்கும் அதிகமானவர்கள் அண்டை நாடான பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றனர்.

Fri, 09/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை