இராணுவ அரை மரதன் போட்டி சண்முகேஸ்வரன் சம்பியன்

இலங்கை இராணுவத்தினால் 55 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட இராணுவ படைப்பிரிவுகளுக்கு இடையிலான அரை மரதன் ஓட்டப் போட்டியில் இராணுவ பீரங்கிப் படைப்பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட மலையக வீரர் குமார் சண்முகேஸ்வரன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

கொவிட் – 19 வைரஸ் காரணமாக இலங்கையில் எந்தவொரு தேசிய ரீதியிலான மெய்வல்லுநர் போட்டிகளும் நடைபெறவில்லை.

பல மாதகால இடைவெளியின் பிறகு இலங்கை இராணுவ படைப்பிரிவுகளுக்கு இடையில் நடத்தப்படுகின்ற இவ்வருடத்துக்கான அரை மரதன் ஓட்டப் போட்டித் தொடர் கடந்த (26) நடைபெற்றது.

இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 111 வீரர்கள் மற்றும் 14 வீராங்கனைகள் பங்குபற்றியிருந்த இம்முறைப் போட்டியானது கொழும்பில் உள்ள இராணுவ தலைமையக வளாகத்தில் இருந்து பனாகொட இராணுவ முகாம் வரையிலான 22 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்டதாக இடம்பெற்றது.

இராணுவ பீரங்கிப் படைப்பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி 5 ஆவது தடவையாகவும் ஆண்களுக்கான அரை மரதன் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட குமார் சண்முகேஸ்வரன், தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாகவும் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்தார்.

குறித்த போட்டியை ஒரு மணித்தியாலமும் 10.16 செக்கன்களில் நிறைவு செய்த அவர் இவ்வருடத்துக்கான தனது முதலாவது வெற்றியையும் பெற்றுக்கொண்டார்.

2016 இல் 4 ஆவது இடத்தையும், 2017 இல் 3 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்ட சண்முகேஸ்வரன், கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இராணுவ அரை மரதன் ஓட்டப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று அசத்தினார்.

மெய்வல்லுநர் அரங்கில் நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் அண்மைக்காலமாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற ஹற்றன் வெலி ஓயாவைச் சேர்ந்த சண்முகேஸ்வரன், இறுதியாக கடந்த வருடம் நேபாளத்தில் நடைபெற்ற 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வெற்றி கொண்டார். கடந்த வருடம் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா, தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடர், இராணுவ மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடர் உள்ளிட்ட போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். இராணுவ படைப்பிரிவுகளுக்கு இடையிலான அரை மரதன் ஓட்டப் போட்டியில் கெலும் சம்பத் குணசேகர (ஒரு மணி. 10.47 செக்.) இரண்டாவது இடத்தையும், சாகர விஜேவிக்ரம (ஒரு மணி. 11.16 செக்.) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதனிடையே பெண்களுக்கான அரை மரதன் ஓட்டப் போட்டியில் இராணுவ பெண்கள் படைப்பிரிவைச் சேர்ந்த வத்சலா ஹேரத் (ஒரு மணி. 25.15 செக்.) முதலிடத்தையும், சுரோகா செவ்வந்தி (ஒரு மணி. 28.57 செக்.) இரண்டாவது இடத்தையும், இரேஷா சுகதபால (ஒரு மணி. 31.04 செக்.) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

போட்டிகளின் பிறகு இடம்பெற்ற பரிசளிப்பு வைபவத்தில் இராணுவ தளபதி சவேந்திர டி சில்வா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், வெற்றயீட்டிய வீரர்களுக்கு பதக்கமும், பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tue, 09/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை