சீனாவில் மாணவர்களுக்கு நஞ்சூட்டிய ஆசிரியைக்கு மரண தண்டனை விதிப்பு

25 சிறுவர்கள் மீது நச்சூட்டி, அதில் ஒருவர் கொல்லப்பட்டதற்காக சீனாவில் பாலர் பாடசாலை ஆசிரியை ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜியாசு நகரில் உள்ள பாலர் பாடசாலை ஒன்றில் சிறுவர்கள் காலையில் கஞ்சி சாப்பிட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே வாங் யுன் என்ற அந்த ஆசிரியை கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

மற்றொரு ஆசிரியையுடன் மோதலில் ஈடுபட்ட அவர் அதற்கு பழிதீர்ப்பதற்கு தமது பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவில் சோடியம் நைட்ரைட்டை கலந்து கொடுத்திருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சோடியம் நைட்ரைட் இறைச்சி கெடாமல் பாதுகாக்க பயன்படுத்தப்படுகின்றபோது அதிகம் பயன்படுத்துவது நச்சுத்தன்மை கொண்டதாகும்.

கடந்த ஆண்டு மார்ச் 27ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு சர்வதேச அளவில் அவதானத்தைப் பெற்றது.

23 மாணவர்கள் காலை உணவுக்குப் பின் வாந்தி எடுத்ததாகவும் மயங்கி விழுந்ததாகவும் அப்போது செய்தி வெளியாகி இருந்தது. இதில் ஒரு மாணவர் 10 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜனவரியில் உயிரிழந்தார்.

வாங் யுன் மேலும் சில முறை மற்றவர்களுக்கு நஞ்சூட்டியதாகவும் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது. அவர் தமது கணவருக்கே விஷம் கொடுத்ததாகவும் கூறப்பட்டது. அவர் அதிக ஆபத்தின்றித் தப்பினார்.

வாங்கின் ஈவிரக்கமற்ற செயல்களுக்குக் கடுமையான தண்டனை தேவை என நீதிமன்றம் தெரிவித்தது.

சீனாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவோரின் எண்ணிக்கை வெளியிடப்படுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் மரண தண்டனைக்கு உள்ளாவதாக உரிமைக் குழுக்கள் குறிப்பிடுகின்றன.

அங்கு விச ஊசி செலுத்தி அல்லது துப்பாக்கிப் படையினால் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

Wed, 09/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை