மாகாண சபை முறைமைகளுக்கு வலுவூட்டப்படுவதே நிலையான அமைதிக்கு வழி வகுக்கும்

− ஹாபிஸ் நஸீர் எம்.பி

மாகாண சபை முறைமைகள் வலுவூட்டப்பட்டு அதிகாரங்களை பகிர்வதன் மூலமே நிரந்தர சமாதானத்தையும் நிலையான அபிவிருத்தியையும் எட்ட முடியுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் சுட்டிக்காட்டினார். மட்டக்களப்பு காத்தான்குடியில் (16) கனேடிய உயர்ஸ்தானிகர் டெவிட் மெகினனுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாகாண சபைகள் வலுவூட்டப்படுவது மாத்திரமன்றி மாகாண சபைத் தேர்தல்களும் அவசரமாக நடத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் விளக்கினார். மாகாண சபை செயலிழந்ததனால் கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அதிகாரிகளின் அலட்சியப் போக்குகள் குறித்து, அவர் பல்வேறு உதாரணங்களுடன் கனேடிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்தார்.

கிழக்கு மாகாணத்தில் கல்வி, சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மாகாண சபை நிர்வாகம் இல்லாததால் அதிகாரிகள், மக்களை அலட்சியப்படுத்துகின்றனர். பொடு போக்குத்தனமாக செயற்படுகின்றனர். மக்களின் தேவைகளை இனங்கண்டு செய்வதற்கு பின்னடிக்கின்றனர். அதுமாத்திரமன்றி மாகாண சபை இயங்காத காரணத்தினால் ஆளணிப் பற்றாக்குறை பல நிறுவனங்களில் ஏற்பட்டு இருக்கின்றது.

கனேடியப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு ஒன்றை மட்டக்களப்பில் அமைத்துத் தர வேண்டுமென உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அகமட், அதன்மூலம் கிழக்கிலிருந்து கனடாவுக்குச் சென்று உயர்கல்வி கற்க ஆர்வம் உள்ளவர்கள் பயனடைய வாய்ப்பு உள்ளது என்றார். கொரோனாவின் தாக்கத்தினால் கனடாவுக்கு செல்ல முடியாமல் இருக்கும் இந்த மாணவர்களுக்கு இந்த முயற்சி பெரிதும் உதவுமெனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

 

பெரியபோரதீவு தினகரன் நிருபர்

Fri, 09/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை