சாதனையை முறியடித்தமை மகிழ்ச்சி

இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன், ஜேர்மனியில் நடைபெற்ற சர்வதேச டிஸ்ஸவ் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 100 மீற்றரை 10.16 செக்கன்களில் ஓடி முடித்து முதலிடம் பெற்று புதிய தெற்காசிய சாதனை படைத்தார்.

இதன்படி, தனது தனிப்பட்ட அதிசிறந்த தூரத்தைப் பதிவு செய்த அவர், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை சாதனையையும் முறியடித்தார்.

முன்னதாக 2016இல் இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை வீரரான ஹிமாஷ ஏஷான் 10.22 செக்கன்களில் ஓடி முடித்து நிலைநாட்டிய சாதனையை நான்கு வருடங்களுக்குப் பிறகு யுபுன் முறியடித்திருந்தமை சிறப்பம்சமாகும்.

அத்துடன், இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டு வரலாற்றில் ஐரோப்பாவில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டித் தொடரொன்றில் இலங்கை வீரரொருவர் வெற்றி பெறுவது இதுவே முதல்தடவையாகும்.

கொவிட் – 19 வைரஸ் காரணமாக இலங்கையில் எந்தவொரு மெய்வல்லுநர் விளையாடுட்டும் ஆரம்பிக்காவிட்டாலும், தற்போது இத்தாலியில் வசித்து வருகின்ற யுபுன், கடந்த முதலாம் திகதி யேமன் நகரில் நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுனர் தொடரில் முதல்தடவையாகக் களமிறங்கினார். குறித்த போட்டித் தொடரின் முதல் சுற்றை 10.29 செக்கன்களில் ஓடி முடித்த அவர், இறுதிப் போட்டியை 10.32 செக்கன்களில் ஓடி முடித்து முதலிடத்தையும் பெற்றுக் கொண்டார். வென்னப்புவ ஜோசப் வாஸ் கல்லூரியின் பழைய மாணவனான யுபுன், இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் அனுசரணை மற்றும் மேற்பார்வையின் கீழ், கடந்த சில வருடங்களாக இத்தாலியில் பயிற்சிகளைப் பெற்று வருகின்றார்.

இறுதியாக அவர், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இராணுவ மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரில் கலந்துகொண்டு ஆண்களுக்கான 100 மீற்றரில் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். போட்டியை அவர் 10.44 செக்கன்களில் நிறைவு செய்தார்.

அதனைத்தொடர்ந்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 4X100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். அந்தப் போட்டியை 39.14 செக்கன்களில் நிறைவு செய்த இலங்கை அணி, 15 வருடங்கள் பழமையான தெற்காசிய சாதனையை முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொவிட் – 19 வைரஸ் காரணமாக இலங்கை வரமுடியாமல் சிக்கிய இலங்கை வீரர்களில் இவரும் ஒருவர். இந்த நிலையில், தனது வெற்றி குறித்து யுபுன் ப்ரியதர்ஷன எமது இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில்,

”கோவிட் – 19 வைரஸுக்குப் பிறகு நான் கலந்துகொண்ட மூன்றாவது போட்டி இதுவாகும். போட்டியின் போது காலநிலை சீராக இருந்தது. இத்தாலி மற்றும் ஜேர்மனியில் மெய்வல்லுநர் போட்டிகள் நடைபெறுகின்ற கடைசி மாதம் இதுவாகும்.

உண்மையில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் இங்கு தங்கியிருந்து பயிற்சிகளை எடுத்து தெற்காசிய மற்றும் இலங்கை சாதனையை முறியடிக்க கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நேரத்தைப் பதிவுசெய்ய நான் நிறைய கஷ்டப்பட்டேன்.

குறிப்பாக, ஒலிம்பிக் விளையாட்டு விழா ஒத்திவைக்கப்பட்டதில் நிறைய நன்மைகள் உண்டு. எனக்கு அதில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.

Thu, 09/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை