அரச சேவை உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும்

திருமலை மாவட்ட அரசாங்க அதிபர்

நாட்டை துரித அபிவிருத்தியின்பால் கொண்டு செல்ல அரச சேவை உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும் என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களுக்கான பயிற்சி செயலமர்வின் அங்குரார்பண நிகழ்வு நேற்றுமுன்தினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதியின் வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய திருகோணமலை மாவட்டத்தில் 1171 பட்டதாரிகள் பயிற்சிக்காக 11 பிரதேச செயலகப் பிரிவிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். பல்கலைக்கழகங்களில் உள்வாரியாக அல்லது வெளிவாரியாக மூன்று, நான்கு வருடங்கள் கல்வியை பூர்த்தி செய்து சிலர் வேலையின்றி வேலையொன்றை பெற எதிர்பார்த்திருக்கலாம். அவ்வகையில் அரசாங்கம் தங்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்கி நிரந்தர நியமனங்களை வழங்கவுள்ளது.

மக்களது வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் தமது கடமையை திருப்தியுடன் மக்களது தேவைப்பாடுகளை இனங்கண்டு உரிய உபாயங்களை கையாண்டு நிவர்த்திக்க முற்படல் வேண்டும்.

பயிற்சியின் பின்னர் ஒவ்வொருவரது கல்வி மட்டம் ,விருப்பு,நிறுவன தேவைப்பாடு மற்றும் நிரந்தர வதிவிடம் ஆகியவற்றை கருத்திற்கொண்டு நிரந்தர நியமனம் வழங்கப்படலாம்.

ஐந்து குழுவாக பட்டதாரி பயிலுனர்கள் வகைப்படுத்தப்பட்டு ஐந்து தலைப்புக்களில் பயிற்சி நெறிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தலைமைத்துவ பயிற்சி மங்கி பிரிட்ச் இராணுவ முகாமிலும்,அரச சேவை பயிற்சி திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்திலும் அதேபோன்று மூதூர் பிரதேச செயலகத்திலும், முகாமைத்துவ பயிற்சி நெறி மாவட்ட செயலகத்திலும்,தனியார் துறை பயிற்சி தெரிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எம்.ஏ.அனஸ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ்.பரமேஸ்வரன், பிரதேச செயலாளர்கள், சக பதவிநிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ரொட்டவெவ குறூப்,திருகோணமலை மாவட்ட விசேட நிருபர்கள்

Wed, 09/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை