மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் இன்று (28) திங்கட்கிழமை ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த ஹர்தால் காரணமாக வர்த்தக நிலையங்கள் பொதுச் சந்தைகள் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டடிருந்தன.
அரச அலுவலங்கள் திறக்கப்பட்டு நடவடிக்கைகள் இடம் பெற்றதுடன் அரச தனியார் போக்குவரத்துச் சேவைகள் தங்கு தடையின்றி இடம் பெற்றன.
உண்ணாவிரதமிருந்து உயிரிழந்த முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் திலீபனின் நினைவு தினத்தை அனுஸ்டிக்க அரசு மறுத்தமையைக் கண்டித்தே இந்த ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.
பாடசாலைகள் திறக்கப்பட்ட போதிலும் மாணவர் வரவில் குறைவு இருந்ததாக தெரிய வருகின்றது.
மட்டக்களப்பு மாநகர சபையின் பொதுச் சந்தை முற்றாக கூடப்பட்டிருந்ததுடன் கடைகளும் மூடப்பட்டிருந்தன..
அதே போன்று மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.
இந்த ஹர்தால் தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சியினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் ஜனாதிபதி கோட்டபாய அரசு ஆட்சிக்கு வந்த பின்பு இதுவரை காலமும் யுத்தத்தினால் உயிர் நீத்த எமது சகல உறவுகளையும் நினைவு கூரும் உரிமை நிர்வாக ரீதியாவும் நீதிமன்ற உத்தரவுகள் மூலமாகவும் தடை விதிக்கப்பட்டுள்ளமை மிகவும் கவலைக்குரியதாகும்.
ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் சர்வதேச சம வாயங்களின் படி மரணித்தவர்களை தனி யாகவும் கூட்டாகவும் நினைவுகூருவது அடிப்படை உரிமையாகப் பிரகடனப்படுத்தியுள்ள நிலையிலும் அவற்றை மீறும் வகையில் இந்த அரசாங்கம் ஜனநாயக விரோதமாக இவற்றை தடை செய்கிறது.
மரணித்த எமது உறவுகளை நினைவு கூரும் உரிமைகளுக்கு ஏற்படுத்தப்படும் தடைகளை நீக்கக் கோரி ஜனாதிபதிக்கு நாம் எழுதிய கடிதத்திற்கு பதில் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தமிழ் தேசிய பரப்பில் ஒன்றிணைந்த பத்து அரசியல் கட்சிகளின் சார்பில் பொலிஸாரின் நீதிமன்ற தடை உத்தரவு உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் எமது கோரிக்கையை வலியுறுத்திய உண்ணாவிரதம் ஒன்று கடந்த 26ஆம் திகதி சனிக்கிழமை முழுமையாக மேற்கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்தக் கோரிக்கை தமிழ் இனம் சார்ந்தது என்பதை நிரூபிக்கும் வகையிலான முழுமையான ஹர்த்தால் பொதுவேலை நிறுத்தத்துக்கு ஒன்றிணைந்த பத்து அரசியல் கட்சி சார்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட் டுள்ளது யாவரும் அறிந்ததே.
தமிழ் மக்களின் இனத்துவ அடையாளம் நில உரிமை சமய மற்றும் கலாசார உரிமைகள் தீவிரமாக மறுக்கப்பட்டு வரும் நிலையில் மரணித்த எமது உறவுகளை நினைவுகூரல் உரிமையை வலியுறுத்தியும் இதன் மறுதலிப்பு தீவிரமாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதற்கு எதிராகவும் தமிழ் இனம் தனது ஆட்சேபனையை வெளிக்காட்டும் முகமாக 28.09.2020 ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
எனவே சகல துறைகளையும் சார்ந்த எமது அன்புக்குரிய உறவுகள் இந்த வேண்டுகோளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி உதவுமாறு பத்து தமிழ் தேசியக் கட்சிகள் சார்பில் வேண்டி நிற்கிறோம்' என அதில் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
(ரீ.எல். ஜவ்பர்கான் - மட்டக்களப்பு குறூப் நிருபர், புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)
மட்டக்களப்பில்
உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கு அரசானது எதிர்ப்பு தெரிவித்தமையைக் கண்டித்து மட்டக்களப்பு தமிழ்ப் பிரதேசமெங்கும் இன்று (28) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் தனியார் கடைகள் மற்றும் சந்தைகள் பூட்டப்பட்டிருந்தன.
அரச அலுவலங்கள் திறக்கப்பட்டு நடவடிக்கைகள் இடம் பெற்றதுடன் அரச தனியார் போக்குவரத்துச் சேவைகள் தங்கு தடையின்றி இடம் பெற்றன.
(மட்டக்களப்பு விசேட நிருபர் - சிவம் பாக்கியநாதன்)
சாவகச்சேரியில்
தமிழ் மக்கள் மீதான அரசின் அடக்குமுறைகளைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து இன்று (28) திங்கட்கிழமை வடக்கு -கிழக்கு பகுதிகளில் முழு அடைப்பு தினமாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் அதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவளித்துள்ளனர். ஹர்த்தால் தினத்தில் சாவகச்சேரி பகுதியில் வழமைக்கு மாறாக வீதிகளில் அதிகளவு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
(சாவகச்சேரி விசேட நிருபர் - தவராஜா சுபேசன்)
மலையகத்தில்
வடக்கு, கிழக்கில் ஜனநாயக ரீதியில் நடைபெறும் பூரண ஹர்த்தாலுக்கு நாமும் ஆதரவு தெரிவிக்கின்றோம். ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாம் எதிர்ப்பை வெளியிடமாட்டோம் என, தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான கலாநிதி இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கிடையிலான காணொளி மூல கலந்துரையாடல் கடந்த 26 ஆம் திகதி நடைபெற்றது. இதன்போது தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என பாரத பிரதமர் வலியுறுத்தியுள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டமாக முன்வைக்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். எனவே, இதனை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மோடியின் அறிவிப்பை நாமும் வரவேற்கின்றோம் என்றார்.
(ஹற்றன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)
அம்பாறை பகுதிகளில்
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக்கடைகள், வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கியது.
இம்மாவட்டத்தில் வழமை போன்று அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது. இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு ,சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர்,அட்டப்பளம், சம்மாந்துறை மாவடிப்பள்ளி ,சவளக்கடை, மத்தியமுகாம் ,உள்ளிட்ட முக்கிய இடங்களில் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து வழமை போன்று செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று பொலிஸாருடன் இணைந்து கடற்படை இராணுவம் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.
அத்துடன் கல்முனை பொது சந்தை உட்பட அதனை சூழ உள்ள பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம் களைகட்டியது. மேலும் வியாபார நிலையங்கள் ,சுப்பர்மார்க்கெட்டுகள், பாடசாலைகள் , பாமசிகள், வங்கிகள் ,எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று திறக்கபட்டடு வியாபாரம் இடம்பெற்றது.
எனினும் சில இடங்களில் பொதுமக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
(பாறுக் ஷிஹான்)
யாழ்ப்பாணத்தில் ஹர்த்தால்
முல்லைத்தீவில்
முல்லைத்தீவு மாவட்டத்திலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது குறிப்பாக நகர்ப் பகுதிகளில் கடைகள் அனைத்தும் பூட்டப்பட்ட நிலையில் மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாகக் காணப்பட்டது.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து நகர்ப் பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டிருக்கும் நிலைமையிலும் அரச திணைக்களங்கள் வங்கிகள் தனது சேவைகளை ஆற்றியது இருப்பினும் குறித்த அரச திணைக்களங்களும் சேவைகளை பெறுவதற்கு வருகின்ற மக்களின் அளவு மிகக் குறைவாகவே காணப்பட்டது.
(மாங்குளம் குறூப் நிருபர் - எஸ். தவசீலன்)
from tkn