சமூகத்தில் இனங்காணப்படாவிடினும் கொரோனா அச்சம் முற்றாக நீங்கவில்லை

அவதானம் அவசியம் என இராணுவத் தளபதி வேண்டுகோள்

சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங் காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகுமென்று இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இராஜகிரியவிலுள்ள கொரோனா கட்டுப்படுத்தல் தேசிய செயற்பாட்டு மையத்தில் நேற்று முன்தினம்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் சமூகத்தினுள் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்படாவிட்டாலும் வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பெரும்பாலானவர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளமை இனங்காணப்படுகிறது.

எனினும் சமூகத்தில் தொற்றாளர்கள் இனங்காணப்படாவிட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உற்சவங்கள் நடத்தப்படும்போதும் பொறுப்பற்று செயற்படுவதாக எமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. தனிமைப்படுத்தல் நிலையங்களாக உள்ள ஹோட்டல்களிலுள்ள ஊழியர்களும் சுகாதார பாதுகாப்புடன் பொறுப்பாக செயற்பட வேண்டும் என்று கோருகின்றோம் என்றார்.

இதன் போது கருத்து தெரிவித்த தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது கொரோனா கட்டுப்படுத்தலில் இலங்கை சிறந்த மட்டத்திலுள்ளது. மக்களின் ஒத்துழைப்பினாலேயே இதனை எம்மால் பேண முடிந்தது.

இந்த நிலைமையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள மக்கள் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கடந்த காலங்களில் சமூகத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் இனங்காணப்பட்டார்கள் என்பதை மறக்காமல் அடிப்படை சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றார்.

Sat, 09/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை