சர்வதேச சைகை மொழிகள் தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிலையத்தின் ஒழுங்கமைப்பில் சர்வதேச சைகை மொழிகள் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் சிறப்பு நிகழ்வுகள் நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிலையத்தின் தலைவர் பூ.கஜதீபன் தலைமையில் சைகை மொழிகளின் உரிமைகளை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு நடைபவனியில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண செவிப்புலன் வலுவற்றோர் பதாகைகளை ஏந்தியவாறு மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு_கல்முனை பிரதான வீதி ஊடாக மட்டக்களப்பு நகர் வரை சென்றனர்.

நடைபவனியைத் தொடர்ந்து மட்டக்களப்பு வை. எம். சி.ஏ நிறுவன பிரதான மண்டபத்தில் பிரதான நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செவிப்புலன் வலுவற்ற வாழ்வோசை பாடசாலை மாணவர்கள் மற்றும் வயது வந்தவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் சிறந்த சித்திரங்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட சித்திரங்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன .

இந்நிகழ்வில் விருந்தினர்களாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜ சரவணபவன், முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் இரா .துரைரெட்ணம், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் ஏ. எம். எம். அலியார், வை. எம். சி. ஏ நிறுவன பொதுச் செயலாளர் ஜெகன் ஜீவராஜ் மற்றும் கிழக்கு மாகாண செவிப்புலன் வலுவற்றோர்களின் சங்க உறுப்பினர்கள், வாழ்வோசை பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

எஸ்.எஸ்.அமிர்தகழியான்

Fri, 09/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை