சீனி இறக்குமதியில் வரி மோசடி முழுமையான விசாரணைக்கு பணிப்பு

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கடுமையான உத்தரவு

 

சீனி இறக்குமதியில் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இறக்குமதி வரியை அதிகரித்தும் பின்னர் அதனை குறைத்தும் குறிப்பிட்ட வர்த்தகர்களுக்கு பெருமளவு நிதி வருமானத்தைப் பெற்றுக் கொடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம் மோசடிகள் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் மொகமட் முசம்மில் எம்.பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  முசம்மில் எம்.பி தமது கேள்வியின் போது, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் அளவு எவ்வளவு என்பதையும் அதற்காக செலவிடப்படும் தொகை எவ்வளவு என்பதையும் எந்தெந்த நாடுகளில் இருந்து சீனி இறக்குமதி செய்யப்படுகின்றது என்றும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன; 2015 தொடக்கம் 2019 வரையிலான காலப்பகுதியில் 2896 மில்லியன் கிலோவுக்கு அதிகமான சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என சுங்க திணைக்களத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.

அதற்கென 191 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. பிரேசில், இந்தியா, சீனா உட்பட சுமார் 68 நாடுகளில் இருந்து இலங்கைக்கு சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் 2016 ஆம் ஆண்டு முப்பது ரூபாவாக இருந்த இறக்குமதி வரியை அப்போதைய நிதியமைச்சர் 25 ரூபாவாக குறைத்தார். இதனால் பெரும்பாலானவர்கள் சீனி இறக்குமதியில் ஈடுபட்டனர்.

அதனையடுத்து சில காலத்தின் பின்னர் இறக்குமதி வரி மேலும் 15 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. அதன் மூலம் குறிப்பிட்ட சீனி இறக்குமதி செய்த வர்த்தகர்கள் பெரும் வருமானத்தை ஏற்றுக்கொண்டனர்.

இதனை நிதியமைச்சு தமது அதிகாரத்தை பயன்படுத்தியே மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் ஆராயப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்,ஷம்ஸ் பாஹிம்

Fri, 09/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை