மழையினால் கைவிடப்பட்ட யாழ்ப்பாண - தோமியன் மாஸ்டர்ஸ் அணிகளின் ஆட்டம்

யாழ்ப்பாண மாஸ்டர்ஸ் மற்றும் தோமியன் மாஸ்டர்ஸ் அணிகள் இடையில் நடைபெற்ற கண்காட்சி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மழையினால் கைவிடப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸை புனித தோமியர் கல்லூரியின் முன்னாள் வீரர்கள் ஒழுங்கு செய்த இந்த கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி  (5) கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகியது.

போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே மழையின் குறுக்கீடு காணப்பட்டதன் காரணமாக ஆட்டம் அணிக்கு 25ஓவர்கள் கொண்டதாக நடைபெற்றது.

அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய தோமியன் மாஸ்டர்ஸ் அணி 25ஓவர்கள் நிறைவில் 9விக்கெட்டுக்களை இழந்து 123ஓட்டங்களைக் குவித்தது.

தோமியன் மாஸ்டர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக நளின் ஜயதிலக்க 25ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் அதிகபட்ச ஓட்டங்களைப் பதிவு செய்திருந்தார்.

இதேநேரம், யாழ்ப்பாண மாஸ்டர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் நல்லையா தேவராஜன் மற்றும் ஜெகன் பழனி ஆகியோர் தலா 2விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 124ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய யாழ்ப்பாண மாஸ்டர்ஸ் அணி 19ஓவர்கள் துடுப்பாடிய நிலையில் மீண்டும் மழை குறுக்கிட ஆட்டம் கைவிடப்பட்டது.

ஆட்டம் கைவிடப்பட்ட சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாண மாஸ்டர்ஸ் அணி 106ஓட்டங்களுக்கு 6விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது.

யாழ்ப்பாண மாஸ்டர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் எஸ். கிருபானந்தன் 35ஓட்டங்களையும், கே. செல்வராஜா 24ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றிருந்தனர்.

மறுமுனையில் தோமியன் மாஸ்டர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் இஷாக் சாப்தீன் 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, டிரான் தேனபது 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

Mon, 09/07/2020 - 12:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை