இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகராக ரங்கன ஹேரத்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் இடதுகை சுழல் பந்துவீச்சாளராக அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்தி உலக சாதனை படைத்தவருமான ரங்கன ஹேரத், இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

முன்னதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகராக இணைந்து கொள்வதற்கு ரங்கன ஹேரத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் அதை அவர் மறுத்து இருந்தார்.

அதில் குறிப்பாக, சர்வதேச அணியொன்றுடன் இணைந்து பயிற்சியாளராகச் செயற்பட்டு அதன் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் அந்த அழைப்பினை அவர் மறுத்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

42 வயதான ரங்கன ஹேரத், தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகராக செயற்படுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபைக்கும், ரங்கன ஹேரத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றன.

பெரும்பாலும், பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளின் டெஸ்ட் தொடர்களின் போது அவர் இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த இரண்டு தொடர்களின் போது வெவ்வேறாக அவருக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சு ஜாம்பவானான முத்தையா முரளிதரனுக்குப் பிறகு இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் ரங்கன ஹேரத்.

அதிலும் குறிப்பாக, அண்மைக்காலங்களில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட பெரும்பாலான டெஸ்ட் வெற்றிகளில் ரங்கன ஹேரத்தின் பங்களிப்பு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன.

டெஸ்ட் அரங்கிலிருந்து ரங்கன ஹேரத் ஓய்வுபெறும் போது 93 போட்டிகளில் விளையாடி 433 விக்கெட்டுக்களை விழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tue, 09/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை