19 இலுள்ள தடைகளை நீக்கி முன்னோக்கி செல்வதே 20 ஆவது திருத்தத்தின் நோக்கம்

பிரேமலால் எம்.பி விடயம் குறித்து ஜனாதிபதி விளக்கம்

19ஆவது திருத்தம் மூலம் விதிக்கப்பட்டுள்ள தடைகளை களைந்து முன்னோக்கி செல்வதே 20ஆவது சீர்திருத்தத்தின் நோக்கமென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ, இதன் முதன்மையான நோக்கம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மாற்றாது எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே என்றும் ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன், பிரேமலால் ஜயசேக்கர எம்.பியின் விவகாரம் தொடர்பில் குறிப்பிட்ட ஜனாதிபதி, கரு ஜயசூரிய, தலதா அத்துகோரள, சஜித் பிரேமதாச ஆகியோர் உள்ளிட்ட அரசியலமைப்பு பேரவையே தீர்ப்பு வழங்கிய நீதிபதியையும் மேன் முறையீட்டு நீதிபதியையும் நியமித்தது என்றும் குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும் போதே ஜனாதிபதி இந்த கருத்தை வெ ளியிட்டார்.

20 ஆவது சீர்திருத்தம் மற்றும் பிரேமலால் ஜயசேக்கர எம்.பி பற்றிய தப்பான எண்ணங்களுக்கு ஜனாதிபதி இதன் போது நேற்று முன்தினம் பதிலளித்தார். ஜனாதிபதி தொடர்ந்தும் பேசும் போது, எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு பற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியலமைப்பின் 20ஆவது சீர்திருத்தத்தின் நோக்கம் 19ஆவது திருத்தம் மூலம் விதிக்கப்பட்டுள்ள தடைகளை களைந்து முன்னோக்கி செல்வதாகும். அனைத்தையும் ஒரே தடவையில் மாற்ற முடியாது. அதற்கு நீண்டகாலம் எடுக்கும். பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

19ஆவது சீர்திருத்தத்தின் சில விடயங்களை அவ்வாறே வைத்துக்கொள்ள வேண்டும். முதன்மையான நோக்கம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மாற்றாது எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாகும். பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர பற்றி எதிர்க்கட்சி முன்வைக்கின்ற குற்றச்சாட்டு பற்றி அவதானத்தை செலுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாமோ அல்லது பிரதமரோ நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எவ்வித தலையீட்டையும் செய்யவில்லையென்று குறிப்பிட்டார்.

தலையீடு செய்வதாயின் உயர் நீதிமன்றத்திலேயே செய்ய வேண்டி இருந்தது.

அவ்வாறானதொரு விடயம் எச்சந்தர்ப்பத்திலும் இடம்பெறவில்லை. நீதிமன்றத் தீர்ப்பை வழங்கிய நீதிபதியை அரசியலமைப்பு பேரவையே நியமித்தது. எதிர்க்கட்சி பொய்யான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Sat, 09/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை