இஸ்ரேல் – ஐ.அ. இராச்சிய உடன்படிக்கை செப். 15இல்

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையில் இராஜதந்திர உறவை ஏற்படுத்தும் உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் இடம்பெறவுள்ளது.

வளைகுடா நாடு ஒன்றுடன் இஸ்ரேல் இவ்வாறான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடவிருப்பது இது முதல் முறை என்பதோடு 1979இல் எகிப்து மற்றும் 1994இல் ஜோர்தானுக்கு அடுத்து மூன்றாவது அரபு நாடாகவும் இது உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த வரலாற்று நிகழ்வை நடத்துவார் என்று வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு தரப்புகளினதும் சிரேஷ்ட தூதுவர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். இதில் இஸ்ரேல் தூதுக்குழுவுக்கு பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தலைமை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் செயித் அந்நாட்டு தூதுக்குழுவுக்கு தலைமை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உடன்படிக்கையின்படி ஆக்கிரமிப்பு மேற்குக் கரையின் பகுதிகளை தமது ஆட்புலத்திற்குள் இணைப்பதை நிறுத்துவதற்கு இஸ்ரேல் உடன்பட்டபோதும் அதன் கால எல்லை குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இந்த முடிவு முதுகில் குத்தும் செயல் என்று பலஸ்தீனர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.

Thu, 09/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை