அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உதைபந்தாட்டத்துறையை முன்னேற்றமடையச் செய்வதற்கான வேலைத்திட்டதை சோபர் விளையாட்டுக் கழகம் ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் இளம் உதைபந்தாட்ட வீரர்களைக் கொண்டு சோபர் ஜூனியர் அணி உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய அணிக்கான சீருடை அறிமுகமும், உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்றுமுன்தினம் மாலை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
சோபர் ஜூனியர் உதைபந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் எம்.எம்.ஏ.சியாம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எச்.பி.அனீஸ், அம்பாரை மாவட்ட மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளர் எஸ்.எல்.தாஜூதீன், சிரேஷ்ட உதைபந்தாட்ட வீரர் எம்.ஜே.எம்.சறூக், அனுசரணையாளர்கள் எம்.சஹீல், சிராஜ், சோபர் விளையாட்டுக் கழகத்தின் ஆலோசகர் எம்.ஏ.சீ. ஹாரீத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு ஜூனியர் அணிக்கான சீருடை அறிமுகம் செய்துவைக்கப்பட்டதுடன் சகல வீரர்களுக்கும் அதிதிகளினால் உதைபந்தாட்ட உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இதன் பின்னர் இடம்பெற்ற நட்புறவு உதைபந்தாட்டப் போட்டியில் சோபர் ஜூனியர் உதைபந்தாட்ட அணியும், இறக்காமம் உதைபந்தாட்டக் கழக ஜூனியர் அணியும் கலந்து கொண்டது. போட்டி நிறைவில் இரண்டு அணிகளும் 1 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் சமநிலை பெற்றபோதும் பெனால்டி முறையில் 4 -1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இறக்காமம் உதைபந்தாட்டக் கழக ஜூனியர் அணி வெற்றி பெற்றது.
(அட்டாளைச்சேனை விசேட,ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்கள்)
from tkn