ஹெரோயினுடன் அரச பகுப்பாய்வு திணைக்கள ஊழியர் கைது

அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரட்டுவாஹேன பிரதேசத்தில் 18 கிராம் 730 மில்லிகிராம் ஹெரோயினுடன் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள ஆய்வுகூட உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கைது நேற்று (16) மாலை இடம்பெற்றுள்ளது.

அத்துருகிரிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்றை சோதனையிட்டபோது, அதில் ஹெரோயின் போதைப்பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதோடு, சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆய்வுகூட உதவியாளராக பணியாற்றும் மாத்தறையைச் சேர்ந்த, 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சந்தேகநபரை இன்று (17) கடுவல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்துள்ளனர்.

சந்தேகநபரிடம் விரிவான விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Mon, 08/17/2020 - 08:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை