ஐ.தே.வுக்குள் புதுமுகங்கள்; யாரை தெரிவு செய்வதென்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்

உலகளாவிய ரீதியில் காலத்துக்குக் காலம் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளதுடன், பொதுத் தேர்தலில் புதிய முகங்களையே நாட்டு மக்கள் கோரியதால் அதிகமான இளம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்துள்ளோம் என ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரத்தை நான் பலவந்தமாக கைப்பற்றிவைத்திருக்கவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.தே.கவின் மாநாட்டில் என்னை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர். அதற்கு சஜித் தரப்பினரும் இணங்கியிருந்தனர்.   பொதுத் தேர்தலில் புதிய உறுப்பினர்கள் தெரிவானதும் கட்சியின் தலைமைத்துவம் பற்றி பேசுவோமென தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் தேர்தலுக்கு முன்னரே தலைமைத்துவத்தை கோரினர். ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக களமிறக்கியிருந்தோம். அவ்வாறு நாம் செய்திருந்தும் வேறு கட்சியொன்றை உருவாக்கி ஐ.தே.கவின் அதிகாரத்தை ஏன் பலவந்தமாக கைப்பற்ற முனைந்தனர்? 

 ஐ.தே.கவிலிருந்து அவர்களது உறுப்புரிமையை நீக்க வேண்டாமென நீதிமன்றம் சென்ற போதும் நீதிமன்றம் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பளிக்கவில்லை. சஜித்தின் தந்தையுடன் நான் நன்றாக பணிப்புரிந்துள்ளேன். அதனால் இந்த நாட்டின் தலைமைத்துவத்திற்கு சஜித் தெரிவாதற்கு நாங்கள் தடைகளை ஏற்படுத்தவில்லை. ஆனால், அவருக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை. 

 ஐ.தே.கவின் கொள்கைகளை காலத்துக்கு ஏற்றவகையில் மறுசீரமைத்துள்ளோம். எமது கொள்கைகள் தொடர்பில் மக்களுக்கும் தெளிவுப்படுத்தியுள்ளோம். பொதுத் தேர்தலில் ஐ.தே.க மாத்திரமே கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நாமும் மாற்றமடைய வேண்டும். அவ்வாறு மாற்றமடையாவிட்டால் முன்னோக்கிப் பயணிக்க முடியாது என்றார்.

Sun, 08/02/2020 - 13:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை