ஈரான் மீதான ஐ.நா ஆயுதத் தடையை அமுல்படுத்த அமெரிக்கா கோரிக்கை

ஈரானுக்கு எதிரான ஐ.நா ஆயுதத் தடைகளை மீண்டும் அமுல்படுத்த அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

அணு செயற்பாட்டுக்கு எதிராக 2010ஆம் ஆண்டு ஈரான் மீது ஐ.நா ஆயுத தடையை விதித்தது. இதன் மூலம் ஈரான் வெளிநாடுகளில் இருந்து போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் அணு ஆயுதங்கள் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரானும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்க ஐ.நா பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளும் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட ஒப்புக் கொண்டு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

ஈரான் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள நிபந்தனைகளை மீறினால், அந்த நாட்டின் மீது ஐ.நா தடையை மீண்டும் அமுல்படுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மற்ற எந்த நாட்டுக்கும் உரிமை உண்டு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அம்சம் ‘மீள் தடை’ என்றழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒக்டோபர் மாதம் காலாவதியாகும் ஈரான் மீதான ஐ.நா ஆயுத தடையை காலவரையின்றி நீட்டிக்கக் கோரி ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. இதன் மூலம் ஈரான் விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா மிகவும் மோசமான முறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடும் அதிருப்தி மற்றும் கோபத்துக்கு உள்ளாகியுள்ள அமெரிக்கா, அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மீள் தடை அம்சத்தை பயன்படுத்தி ஈரான் மீதான அனைத்து ஐ.நா பொருளாதாரத் தடைகளையும் மீண்டும் அமல்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்த கோரிக்கையை ஐ.நா சபையில் முறைப்படி ஒப்படைப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோ ஆகிய இருவரும் நியூயோர்க் சென்றுள்ளனர்.

எனினும் அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகிவிட்டதால், தற்போது அதில் இடம் பெற்றுள்ள மீள் தடை அம்சத்தை பயன்படுத்தி அமெரிக்காவால் ஈரான் மீது தடை விதிக்க முடியாது என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மற்ற நாடுகள் தெரிவிக்கின்றன. ஆனால், சட்டரீதியில் தாங்கள் அந்த ஒப்பந்தத்தில் நீடிப்பதாக அமெரிக்கா வாதிடுகிறது.

ஒப்பந்தத்திலிருந்து விலகினாலும் மீள் தடை அம்சத்தை பயன்படுத்துவதிலிருந்து அமெரிக்காவைத் தடுக்க முடியாது என டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது.

மீள் தடை முறையில் ஈரான் மீது அமெரிக்கா தடை விதித்தால், அந்தத் தடை அமுலில் இருப்பதாக அமெரிக்காவும், அப்படி ஒரு தடையே இல்லை என்று பிற நாடுகளும் ஒரே நேரத்தில் கூறும் வினோதமான சூழல் ஏற்படும். இந்த சூழ்நிலை உலக அரங்கில் ஏற்கனவே குறைந்து வரும் ஐ.நா பாதுகாப்பு சபையின் முக்கியத்துவத்தை மேலும் மங்கச் செய்யும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Sat, 08/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை