கிளிநொச்சியில் சட்டவிரோத மண் அகழ்வு; இராணுவத்தின் உதவியை நாடும் அரசாங்க அதிபர்

இரணைமடு குளத்தின் கீழ் பகுதியையும் விட்டுவைக்கவில்லையாம் 

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்க இராணுவத்தின் உதவியை நாடவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.  

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் ஊடகவியலாளர்களுடன்(18) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,  

கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றமை ஊடகங்கள் உட்பட பலரும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.  

குறிப்பாக இரணைமடுக் குளத்தின் கீழான சட்டவிரோத மணல் அகழ்வால் குளத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். எனவே இதனைக் கட்டுப்படுத்த இராணுவத்தின் உதவியை பெறவுள்ளதாகவும்  இது தொடர்பில் இன்று புதன்(19) கிழமை கிளிநொச்சி படைகளின் கட்டளைத்தளபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு, பன்னங்கண்டி, கண்டாவளை, பெரியகுளம், கல்லாறு, தட்டுவன்கொட்டி, ஊற்றுப்புலம், அக்கராயன், கிளாலி, முகமாலை, சோரன்பற்று, புளோப்பளை, மற்றும் பளையின் மேலும் பல பிரதேசங்கள் உட்பட பல இடங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறன்றமை குறிப்பிடத்தக்கது. 

பாஸ்கரன், தமிழ்ச் செல்வன்

Wed, 08/19/2020 - 11:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை