எண்ணெய் கப்பலை கைப்பற்றிய ஈரான்: அமெரிக்கா குற்றச்சாட்டு

ஹார்முஸ் ஜலசந்தி அருகே எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படையினர் கைப்பற்றியதாக அமெரிக்கா குற்றம் சுமத்தி உள்ளது.

ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா திடீரென தானாக விலகிக்கொண்டதில் இருந்து, அவ்விரு நாடுகள் இடையே பதற்றம் நிலவி வருகிறது. மத்திய கிழக்கு பகுதியில், அதிலும் குறிப்பாக பாரசீக வளைகுடா பகுதியில் பயணிக்கின்ற கப்பல்களை ஈரான் இலக்காக கொண்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தி வருகிறது.

இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி அருகே லைபீரியா கொடியேந்தி எம்.வி. விலா என்ற எண்ணெய் கப்பல் வந்து கொண்டிருந்தது. அந்த எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படையினர் ஒரு ஹெலிகொப்டரில் வந்து கைப்பற்றியதாகவும், 5 மணி நேரம் தங்கள் பிடியில் வைத்திருந்து விட்டு விடுவித்து விட்டதாகவும் அமெரிக்கா குற்றம் சுமத்தி உள்ளது.

அதே நேரத்தில் அந்த எண்ணெய் கப்பலில் இருந்து எந்த ஒரு துயர அழைப்பும் வரவில்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும் அந்த எண்ணெய் கப்பலை எதற்காக ஈரான் கைப்பற்றியது என்பது குறித்து அமெரிக்க இராணுவ அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.

இருப்பினும் இந்த விவகாரம் ஈரான், அமெரிக்கா இடையே புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sat, 08/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை