முல்லைத்தீவில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதோடு, இருவர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு – கொக்கிளாய் வீதியில், உன்னாபிலவ் பிரதேசத்தில் நேற்று (29) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய் பிரதேசத்திற்கு பயணித்த 02 மோட்டார் சைக்கிள்கள் மீது, வீதியோரத்திலிருந்த மரமொன்று முறிந்து வீழ்ந்து இவ்விபத்துச் சம்பவித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
02 மோட்டார் சைக்கிள்களில் பயணித்த நால்வரும் இவ்விபத்தில் காயமடைந்து, முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த முள்ளியவளை பிரதேசத்தைச் சேர்ந்த 21, 33 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் முல்லைத்தீவு வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(மாங்குளம் குரூப் நிருபர் – சண்முகம் தவசீலன், ச.இராசரத்தினம்)
from tkn