இலங்கை - பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் ஒக்டோபரில்

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஒக்டோபர் மாதத்தில் நடைபெறுவது (12 ம் திகதி) உறுதி செய்யப்பட்டது.

பங்களாதேஷ் – இலங்கை அணிகள் ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக விளையாடவிருந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில் கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

மூன்று போட்டிகள் கொண்ட குறித்த டெஸ்ட் தொடரே எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தொடக்கம் நடைபெறவுள்ளது. அந்தவகையில், இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகும் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இலங்கை கிரிக்கெட் சபையும், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையும் முன்னதாக ஒத்திவைக்கப்பட்ட இந்த கிரிக்கெட் தொடரினை விரைவில் நடாத்துவதற்கு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்திருந்தன. இறுதியில் இந்த பேச்சுவார்தைககள் வெற்றிகரமாக நிறைவடைந்ததனை அடுத்தே, இந்த டெஸ்ட் தொடர் நடைபெறுவதற்கான சாத்தியப்பாடு உருவாகியிருக்கின்றது.

இந்த டெஸ்ட் தொடர் பங்களாதேஷ் – இலங்கை ஆகிய இரண்டு நாட்டு அணிகளும் கொவிட்-19 வைரஸ் தொற்றினால் கிரிக்கெட் போட்டிகள் தடைப்பட்ட பின்னர் விளையாடவுள்ள முதல் சர்வதேச தொடராகவும் அமையவிருக்கின்றது.

பங்களாதேஷ் அணி கடந்த ஆறு வருடங்களில் இலங்கையுடன் விளையாடும் முதலாவது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராகவும் ஒக்டோபரில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர் அமையவிருப்பது சுட்டிக்காட்ட வேண்டிய விடயமாகும்.

இந்த டெஸ்ட் தொடருக்காக இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் அணி, இலங்கை அரசாங்கத்தின் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதால் ஒக்டோபர் மாதத்தின் ஆரம்பத்திலேயே இலங்கைக்கு வந்து 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்பட்டு பயிற்சிகளில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த டெஸ்ட் தொடருக்கான போட்டித் திகதிகள் மற்றும் மைதான விபரங்கள் என்பன பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Fri, 08/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை