புதிதாக களமிறங்கிய எனக்கு கிடைத்த வாக்குகளை வெற்றியாகவே கருதுகிறேன்

பாரிய சவால்களுக்கு மத்தியில் அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட போதும், பாராளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை என எவரும் கவலைப்படத் தேவையில்லை, மிகக் குறுகிய காலத்தில் எனக்கு கிடைத்த வாக்குகளை வெற்றியாகவே கருதுவதாக விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

தேர்தலுக்குப்பிறகு முதல் தடவையாக அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம்செய்த முன்னாள் பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன், கல்முனையில் மக்களைச் சந்தித்து வாக்களித்தமைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றுகையிலே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்: எனது வெற்றிக்கு இரவுபகலாக உழைத்த உள்ளுர், வெளியூர் புலம்பெயர் மக்களுக்கு நன்றிகள். நான் ஒருபோதும் அம்பாறை மாவட்ட மக்களை மறக்கமாட்டேன். ஐந்து வருடத்திற்கொருதடவை வருபவனல்ல நான். நான் என்றும் உங்களோடு பணியாற்றுவேன்.

என்னைவிட குறைந்த விருப்புவாக்குகளைப் பெற்றுத்தான் சம்பந்தன் போன்றவர்கள் பாராளுமன்றம் சென்றுள்ளனர். வடக்கு, கிழக்கு மக்கள் த.தே.கூட்டமைப்பை தூக்கிவீசி எறிந்துள்ளனர். இந்த மாற்றம் இன்னும் மாகாண சபைத்தேர்தலில் தென்படவுள்ளது.

தமிழ் கூட்டமைப்புக்கு பின்னால் சென்றால் இருப்பதும் இல்லாமலே போகும். அவர்களே ஒற்றுமைப்படாதபோது மக்களை எவ்வாறு அவர்கள் ஒற்றுமைப்படுத்துவர்.

எமது கட்சிக் கிளைகளை மாவட்டம் பூராக விஸ்தரித்து இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளேன். இன்னும் ஓரிரு வாரங்களில் நல்லசெய்திகள் வரலாம். எனவே மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

காரைதீவு குறூப் நிருபர்

Fri, 08/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை