9ஆவது பாராளுமன்ற கன்னி அமர்வு; ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் இன்று

சபாநாயகர், பிரதி சபாநாயகர் தெரிவும் இடம்பெறும்

பொதுத் தேர்தலுக்குப் பின்னரான ஒன்பதாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் இன்று ஆரம்பமாகிறது. 

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வை கௌரவத்துடனும் அதேவேளை எளிமையாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் கொவிட் 19தாக்கம் காரணமாக பொதுத் தேர்தல் பிற்போடப்பட்டதால் பாராளுமன்றம் கூட்டப்படுவது தடைப்பட்டது. இந்நிலையில் சுமார் ஆறு மாதங்களுக்குப் பின்னர் இன்று கூடுகிறது.  

அதற்கிணங்க இன்றைய தினம் காலை 9.30மணிக்கு 9ஆவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வு இடம்பெறுவதுடன் முதற்கட்டமாக சபாநாயகர்,பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் ஆகியோர் தெரிவு செய்யப்படுவர். அதனையடுத்து பாராளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களதும் சத்தியப்பிரமாண பிரகடனம் இடம்பெறும். 

நேற்று (19) இடம்பெற்ற ஆளும்கட்சி பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் சபாநாயகராக, அமைச்சர் மஹிந்த யாபாவின் பெயரையும், பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டியின் பெயரையும் பரிந்துரை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிகழ்வை அடுத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர்,குழுக்களின் பிரதித் தலைவர், சபை முதல்வர் உள்ளிட்டவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பர். அதனையடுத்து பிற்பகல் 3,00மணிவரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும் என பாராளுமன்ற செயலாளர்  நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார். அதனையடுத்து மீண்டும் பாராளுமன்றம் பிற்பகல் 3மணிக்கு உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் ஆரம்பமாகும். 

ஜனாதிபதி, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பித்து உரை நிகழ்த்துவார். 

அதற்கிணங்க புதிய பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் கலந்து கொள்ளவுள்ள அதிதிகள் இன்று பிற்பகல் 2. 15மணிக்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசனங்களில் அமர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

2.25மணியளவில் அனைத்து அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆசனத்தில் அமரவுள்ளனர். 2.30மணியளவில் புதிய சபாநாயகரின் வருகை இடம்பெறும். 

பிற்பகல் 2 .35மணியளவில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் அவரது பாரியாரும் பாராளுமன்ற கட்டிடத்திற்கு வருகை தருவர்.அதனையடுத்து 2.40மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது பாரியாரும் வருகை தருவர். 

அவர்களை சபாநாயகரும் பாராளுமன்ற செயலாளர் நாயகமும் உத்தியோகபூர்வமாக வரவேற்பர். 

அதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களால் ஜெய மங்கள கீதம் இசைக்கப்பட்டு  ஜனாதிபதியின் கொடி ஏற்றப்பட உள்ளது. 

அதனையடுத்து பிரதமர்,சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி சபைக்கு அழைத்துச் செல்லப்படுவார். அதனையடுத்து ஜனாதிபதியின் தலைமையில் சபை அமர்வு உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தமது கொள்கை பிரகடனத்தை வெளியிட்டதன் பின்னர் பாராளுமன்றம் பிரிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்படும். 

புதிய பாராளுமன்றத்தின் முதலாவது உத்தியோகபூர்வ நிகழ்வு சிறப்பாக இடம் பெறுவதுடன் இராணுவ அணிவகுப்பு,மோட்டார் வாகன பவனி ஆகிய நிகழ்வுகள் இம்முறை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது 

அதேவேளை, நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றியே பாராளுமன்றத்தின் முதலாவது உத்தியோகபூர்வ அமர்வு இடம்பெறவுள்ளது.  ஒன்பதாவது பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலும் அபே ஜனபல கட்சியின் சார்பிலும் தேசிய பட்டியலில் நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் தொடர்பில் அக்கட்சிகள் இதுவரை பெயர்களை அறிவிக்காத நிலையில் அவர்களுக்கான ஆசனம் வெறுமையாகவே காட்சியளிக்கும். 

அந்த இரு கட்சிகளின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களுக்கான பெயர்கள் இதுவரை அறிவிக்கப்படாத நிலையில் தேர்தல் ஆணைக்குழு அதற்கான வர்த்தமானியையும் இதுவரை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 

Thu, 08/20/2020 - 09:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை