கிணற்றிலிருந்து 7 வயதுச் சிறுவனின் சடலம் மீட்பு

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பூவரசன்தீவு பகுதியில்  07 வயது சிறுவன்  கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக,  பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (23) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. 

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் கிண்ணியா,பூவரசன்தீவு பகுதியைச் சேர்ந்த முஹம்மது நிஜாம் முஹம்மது அஸ்மி  (07) என,பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

11 வயது சிறுவனும் ஏழு வயது சிறுவனும் ஒன்றாக விளையாடிக்கொண்டிருந்தபோது 11 வயது சிறுவன் மணல் குவியலில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். 

இந்நிலையில், 07 வயது சிறுவன் பாழடைந்த கிணற்றுப் பக்கம் சென்று தவறுதலாக கிணற்றில் விழுந்துள்ளதாகவும் இதனையடுத்து 11 வயது சிறுவன் உறவினர்களிடம் தெரியப்படுத்தியதையடுத்து அவரது சடலம் மீட்கப்பட்டதாகவும்  பொலிஸாரின்ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து  கிண்ணியா திடீர் மரண விசாரணை அதிகாரி கே.நெஹ்மத்துல்லாஹ் சம்பவ இடத்திற்கு சென்றுசடலத்தைபார்வையிட்டதுடன்,சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாரருக்கு கட்டளையிட்டார். 

உயிரிழந்த சிறுவனின் சடலம் தற்பொழுது  திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை இன்றையதினம் இடம்பெறவுள்ளதாகவும்,இதனை அடுத்து சிறுவனின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும்,வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார். 

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்) 

 

Mon, 08/24/2020 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை