இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் 03 வாக்காளர்களுக்கு ஒரு வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாலை மட்டக்களப்பு வாவியின் நடுவே மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு மேற்காக அமைந்துள்ள வைத்தியசாலையாகும். இது பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட தொழுநோய் வைத்தியசாலையாகும்.
தொழுநோய் வைத்தியசாலையில் சுமார் 200 பேர் வரை தங்கியிருந்து சிசிச்சை பெறக்கூடிய வசதிகளை கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது. அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதிகள், வணக்கஸ்தலங்கள் என பல வசதிகளும் இருந்துள்ளன.
மாந்தீவில் 2009ஆம் ஆண்டு பாரிய தீ அனர்த்தம் ஒன்று ஏற்பட்டது. அப்போது 13 நோயாளர்கள் சிசிச்சை பெற்று வந்தனர். அங்கு தீ அனர்த்தத்தின் பின்னர் வைத்தியசாலை சரியான பராமரிப்பு இன்றி மூன்று பேர் தவிர அனைவரும் சென்று விட்டதாகவும், அதில் தற்போதுள்ளவர்களின் வாக்குகள் மட்டக்களப்பு தேர்தல்தொகுயில் பதியப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது.
இவர்களுக்கான வாக்குப்பெட்டி இயந்திரப்படகு மூலம் மாந்தீவு வாக்கெடுப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
மூன்று வாக்களர்களுக்கும் பொதுவான நியமங்களே கடைப்பிடிக்கப்படவுள்ளதாகவும், வாக்களிப்பு நேரமாகிய 7.00 மணி முதல் 5.00 மணி வரை வாக்களிக்கலாம் என, குறிப்பிடப்பட்டுள்ளது.
(வெல்லாவெளி தினகரன் நிருபர்- க. விஜயரெத்தினம்)
from tkn