யுத்தத்தினால் நிறைவேற்ற முடியாததை ஜனநாயக முகத்தை காட்டிப்பெற TNA முயற்சி

கொலைகார யுகம் மீண்டும் ஏற்படாதிருக்க நாட்டு மக்களுக்கு தெளிவான தீர்மானமெடுக்குமாறு பிரதமர் மஹிந்த அழைப்பு

இந்நாட்டின் இளைஞர் யுவதிகள் வீதிகள் தோறும் கொலை செய்யப்பட்ட யுகமொன்று மீண்டும் ஏற்படாதிருப்பதற்கு இம்முறை தேர்தலில் தெளிவான தீர்மானமொன்றை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.  

தம்பதெனிய, நாரம்மல திவிநெகும சந்தை வளாகத்தில் நேற்று  முற்பகல் நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றிய பிரதமர், அன்றைய பயங்கரவாத யுகத்தில் நாட்டில் சுமார் 60 ஆயிரம் படித்த, புத்திசாதுர்யமிக்க இளைஞர்களை நாடு இழக்க நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

பாரியளவிலான பட்டதாரிகள் இந்த பயங்கரவாத காலத்தின்போது கொலை செய்யப்பட்டதுடன், அதில் 4 ஆயிரத்து 210 பேர் குருநாகல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.  

அன்று நாட்டில் நிலவிய நிலை தொடர்பில் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு செய்வதற்கும், சாட்சி வழங்குவதற்கும் தான் உள்ளிட்ட குழுவினர் முன்வந்ததாக சுட்டிக்காட்டிய பிரதமர் தமது அரசாங்கத்தின் கீழ் ஒருபோதும் இவ்வாறானதொரு நிலை ஏற்படாது என்றும் தெரிவித்தார்.   பின்னர் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு வடக்கு , கிழக்கை பிரித்துக் கொண்டு தனி அரசாங்கமொன்றை கட்டியெழுப்புவதற்கு முயற்சித்தாலும் அந்த முயற்சியை

தோற்கடிக்க எமது அரசாங்கத்திற்கு முடியுமானதாயிற்று.அன்று யுத்தம் காரணமாக நிறைவேற்றிக் கொள்ள முடியாதவற்றை இன்று ஜனநாயகத்தின் முகத்தை காட்டி பெற்றுக் கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சித்தாலும் பிரபாகரன் கேட்டதை ஒருபோதும் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை என்றும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.  

பயங்கரவாதம், யுத்தம் என்பவற்றுக்கு மாறாக இளைஞர் யுவதிகளுக்கு புதிய கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் தொழில் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான வாய்ப்பை அதிகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்து அவர்களது எதிர்காலத்தை வெற்றிகரமான நிலைக்கு கொண்டு செல்வதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் செய்யக்கூடிய அனைத்து விடயங்களையும் நிறைவேற்றுவதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார். இதே வேளை எல்.ரி.ரி.ஈ. அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை  பிரபாகரன் கோரிய தனிநாட்டு கோரிக்கையை வாக்குகள் மூலமோ அல்லது வேறு எந்த  முறையிலோ பெற்றுக்கொடுப்பதற்கு தயாரில்லையென்றும்  பிரதமர் மஹிந்த ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.    பிரபாகரன் ஆயுத மோதல் மூலம் பெற்றுக்கொள்ள நினைத்ததையே தமிழ்  தேசியக் கூட்டமைப்பு தேர்தல் வாக்குகள் மூலம் பெற்றுக்கொள்ள  முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ள பிரதமர், பிரபாகரன் மேற்கொண்ட யுத்தம்  இன்னும் கைவிடப்படவில்லை அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுத்தி  வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

நாரம்மலையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.   மூன்று தசாப்த காலமாக இந்த நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத  யுத்தத்தை முடிவுக்குக்கொண்டுவந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும்  இயல்புநிலைக்கு கொண்டுவர முடிந்துள்ளது.  

எனினும் அன்று பயங்கரவாதிகள் மேற்கொண்ட யுத்தத்தை இன்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் மூலம் முன்னெடுப்பதற்கு முயற்சிசெய்து  வருகின்றது. அவர்கள் எவரதும் வேண்டுகோள் நிறைவேறும் வகையில் இந்த நாட்டை  பிளவுபடுத்துவதற்கு எமது அரசாங்கம் தயாரில்லை என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.   1980 ஆண்டு காலங்களில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளில்  60,000 க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் பலியாகியுள்ளனர். என்பதைக்  குறிப்பிட்ட பிரதமர், குருநாகல் மாவட்டத்தில் மாத்திரம் 4,210 பேர் அவ்வாறு  பலியாகியுள்ளனர். இது மிகவும் கவலை தரும் விடயமாகும். இனியும்  அதுபோன்றதொரு நிலை உருவாக இடமளிக்கப்படமாட்டாது. நாட்டில் சிறந்த சூழல்  உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)  

Tue, 07/28/2020 - 07:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை