கழிவு தேயிலையை பொதி செய்த இருவர் கைது

சீதுவையில் கழிவு தேயிலை தூளுடன் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடமிருந்து 700 கிலோகிராம் தேயிலை தூளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டுகொட பிரதேசத்தில் நேற்று  (12) மாலை இக்கைது இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்திலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் கழிவு தேயிலை பொதி செய்யப்படுவதாக, சீதுவை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் பொலிஸாரினால் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டபோது, கழிவு தேயிலையை பொதி செய்துகொண்டிருந்த இருவரை கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு, இச்சந்தேகநபர்களிடமிருந்து குறித்த கழிவு தேயிலையை கைப்பற்றியுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ராகமை, ஜா-எல பிரதேசங்களைச் சேர்ந்த 45, 51 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சந்தேகநபர்களை இன்று (13)  நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்துள்ளனர்.

இச்சந்தேகநபர்களிடம் விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Mon, 07/13/2020 - 12:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை