டெஸ்ட் தொடரின் வெற்றி யாருக்கு? தீர்க்கமான போட்டியில் இங்கிலாந்து - மே.தீவுகள் மோதல்!

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் இப்போட்டி, இன்று வெள்ளிக்கிழமை) மன்செஸ்டர்- ஓல்ட் ட்ரப்போர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஜேஸன் ஹோல்டரும் தலைமை தாங்கவுள்ளனர்.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 113 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே சர்வதேச கிரிக்கெட் போட்டி 117 நாட்களுக்கு பிறகு கடந்த 8-ந் திகதி இங்கிலாந்தில் தொடங்கியது.

இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த டெஸ்ட் தொடரை வெல்லப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த மண்ணில் விளையாடுவதால் இங்கிலாந்திற்கு தொடரை வெல்ல அதிகமான வாய்ப்பு உள்ளது. கடந்த டெஸ்டில் 3-வது நாள் ஆட்டம் மழையால் இரத்தாகியிருந்தாலும் அந்த அணி வீரர்கள் சிறப்பாக ஆடி வெற்றியைப் பெற்றனர்.

ஒருவேளை போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தால் டெஸ்ட் தொடர் சமநிலையில் முடியும்.

இங்கிலாந்து அணி துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறது.

குறிப்பாக சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் அணிக்கு முதுகெலும்பாக உள்ளார். இந்த டெஸ்டிலும் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக கடந்த டெஸ்டில் நீக்கப்பட்ட ஆர்ச்சர் அணிக்கு திரும்பி இருக்கிறார். இதனால் வீரர்கள் தேர்வு இங்கிலாந்துக்கு சவாலானது.

மேற்கிந்திய தீவுகள் அணி முதல் டெஸ்டை போலவே இந்த டெஸ்டிலும் வென்று 32 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

அந்த அணியில் துடுப்பாட்டத்தில் பிளாக்வுட், புரூக்ஸ், பரத்வெயிட் ஆகியோரும், பந்துவீச்சில் கேப்ரியல், தலைவர் ஹோல்டர், அல்ஜாரி ஜோசப், கேமர் ரோச் ஆகியோரும், சகலதுறைவீரரில் ராஸ்டன் சேஸு நல்ல நிலையில் உள்ளனர்.

இந்த டெஸ்ட் போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

Fri, 07/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை