பயிற்சிப் போட்டியில் சதம் பெற்ற டிக்வெல்ல, சந்திமால், திசர

கண்டி பல்லேகலே சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் இடையிலான பயிற்சி ஒருநாள் போட்டி காலநிலை சீர்கேட்டினால் முடிவுகளின்றி கைவிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் ஆபத்து இலங்கையில் குறைந்திருப்பதன் காரணமாக, இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களது பயிற்சிகளும் ஒவ்வொரு கட்டமாக நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையிலையே, இந்த பயிற்சிகளின் ஒரு அங்கமாக இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களிடையே மோதும் பயிற்சி ஒருநாள் போட்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் இலங்கை அணி வீரர்கள் பதினொரு வீரர்கள் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்ததோடு, இதில் ஒரு அணி திமுத் கருணாரத்ன மூலமும் மற்றைய அணி நிரோஷன் டிக்வெல்ல மூலமும் வழிநடாத்தப்பட்டிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நிரோஷன் டிக்வெல்ல தரப்பு முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 346 ஓட்டங்களைக் குவித்தது.

துடுப்பாட்டத்தில் அணித்தலைவராக செயற்பட்ட நிரோஷன் டிக்வெல்ல ஆரம்ப வீரராக களம் வந்து சதம் ஒன்றுடன் வெறும் 100 பந்துகளில் 14 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 127 ஓட்டங்களைக் குவித்தார். இதேநேரம், டிக்வெல்லவின் அணி சார்பில் மற்றுமொரு வீரராக சதம் பெற்ற தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காது 100 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 117 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 348 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய திமுத் கருணாரத்னவின் அணி 45.3 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 292 ஓட்டங்கள் பெற்றிருந்த போது ஆட்டம் சீரற்ற காலநிலையினால் முடிவுகள் ஏதுமின்றி கைவிடப்பட்டது.

திமுத் கருணாரத்ன அணி சார்பிலான துடுப்பாட்டத்தில் அதிரடியான முறையில் 72 பந்துகளுக்கு சதம் விளாசிய திசர பெரேரா 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 101 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதேநேரம், தனன்ஞய டி சில்வா 49 ஓட்டங்களையும், லஹிரு திரிமான்ன 45 ஓட்டங்களையும் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Thu, 07/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை