உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா முறையாக விலக முடிவு

உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.  

அடுத்த ஆண்டு ஜூலை 6ஆம் திகதிக்குள் அந்த அமைப்பை விட்டு வெளியேறவிருப்பதாக அது குறிப்பிட்டது. இது பற்றி ஐ.நா மற்றும் அமெரிக்க கொங்கிரஸை அறிவுறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதனை ஐ.நா அமைப்பும் உறுதி செய்துள்ளது.  

டொனால்ட் டிரம்ப் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்காவை மீட்டுக்கொள்ளப்போவதாய்ச் சில மாதங்களாக மிரட்டல் விடுத்து வந்தார்.  

கொவிட்–19 சூழலை உலக சுகாதார அமைப்பு கையாண்ட விதம் குறித்து வெகுவாகக் குறைகூறிய டிரம்ப், சீனாவை மையமாகக் கொண்டு அது செயல்படுவதாகவும் சீனாவின் தவறை மூடி மறைப்பதாகவும் சாடினார்.  

அமெரிக்காவின் முடிவு தீர ஆலோசிக்காமல் எடுக்கப்பட்டது என்றும் அனைத்துலக ரீதியில் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடும் என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் 400 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கிவருகிறது.  

எனினும் நவம்பர் மாத நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு எதிராக போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன், “நான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற முதல் நாள், மீண்டும் உலக சுகாதார அமைப்புடன் அமெரிக்கா இணையும்” எனத் தெரிவித்துள்ளார்.  

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 131,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.    

Thu, 07/09/2020 - 07:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை