இன நல்லுறவைக் கட்டியெழுப்பி எமது கட்சியில் சகலருக்கும் சம அந்தஸ்து

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பெருமிதம்

இனங்களுக்கிடையே மிகக் குறுகிய காலத்தில் நல்லுறவைக் கட்டியெழுப்பியதனாலேயே இந்துக்களும், கிறிஸ்தவர்களும், பௌத்தர்களும், முஸ்லிம்களும் எமது கட்சியின் ஊடாக, அரசியலில் அதிகாரமுள்ள பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்பட்டனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார், காக்கையன்குளத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று, உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். ரிஷாட் பதியுதீன் தொடர்ந்து உரையாற்றுகையில்,  அரசியலில் எதையெதை எல்லாமோ செய்ய சக்தி இருந்ததோ, அத்தனையையும் இந்தப் பிரதேசத்துக்குச் செய்துள்ளோம்.

மீண்டும் இந்தப் பிரதேசத்துக்கு நீங்கள் வந்து சுவாசிப்பதற்கான சூழலை ஏற்படுத்தித் தந்ததோடு, வாழ்க்கைக்குத் தேவையான கட்டமைப்புக்களை அமைத்துக் கொடுத்தோம்.

அதேபோன்று, சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர், நாம் எடுத்த முயற்சியின் பலனாக, இன்று இந்தப் பிரதேசத்தின் பாதை புனரமைப்பு வேலைத்திட்டங்கள் இடம்பெறத் தொடங்கியமை, எமது பணிக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறோம். தமிழ் மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்ததோடு, அவர்களுக்கான அபிவிருத்திச் செயற்பாடுகளையும் முடிந்தளவில், மிக நேர்மையாக செய்திருக்கின்றோம்.

எம்மைத் தோற்கடிக்க வேண்டுமென்ற சூழ்ச்சி, இப்போது உக்கிரமாக இடம்பெறுகின்றது. சமுதாயத்துக்காக பேசுகின்ற தலைமைகளை வீழ்த்த நினைக்கும் சக்திகளே, எமக்கெதிரான செயற்பாடுகளில் தீவிரம் காட்டியுள்ளன.

இந்தச் சமுதாயத்தை துன்பப்படுத்துவதையும், துவம்சம் செய்வதையும் குறிக்கோளாகக்கொண்டு, திட்டமிட்டு இயங்கும் சக்திகள், எம்மை வீழ்த்த எடுக்கும் முயற்சிகளுக்கு நீங்கள் ஒருபோதும் இடங்கொடுக்கக் கூடாது. ஊர்களும் ஊரவர்களும் ஒன்றுபடுவதன் மூலமே இவற்றை முறியடிக்கலாம் என்றார்.

Thu, 07/09/2020 - 06:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை