மேலும் இருவர் காயம்; சாரதியைச் தேடி வலை விரிப்பு
ஹக்மன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொங்கல வீதிச் சோதனைச்சாவடி கடமையில் ஈடுபட்ட பொலிஸார் மீது டிப்பர் வாகனமொன்று வேண்டுமென்று மோதிச் சென்றதில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (13) இரவு 11.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மாத்தறை திசையிலிருந்து ஹக்மன திசை நோக்கி பயணித்த டிப்பர் ஒன்றை, சோதனையிடுவதற்காக நிறுத்துமாறு சமிக்ஞை செய்த நிலையில், அதனை கருத்திலெடுக்காது குறித்த டிப்பர் சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து முன்னாலிருந்த சோதனைச்சாவடியில் அது தொடர்பில் அறிவித்த பொலிஸார், அதனைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
இதன்போது, ஹக்மன வீதியில் கொங்கல 13ஆம் கட்டை சோதனைச்சாவடியில் வைத்து டிப்பரை நிறுத்திய அங்கிருந்த பொலிஸார் அதனை சோதனையிட்டுக் கொண்டிருந்த வேளையில் குறித்த பொலிஸ் அதிகாரிகளும் அங்கு வந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, அபாயகரமான வகையில் டிப்பர் வாகனத்தைச் செலுத்தியமை தொடர்பில் எச்சரித்து, தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரமொன்றை வழங்கி சாரதியை எச்சரித்து அனுப்பியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் ஹக்மன நோக்கி பயணித்த குறித்த டிப்பர் மீண்டும் 10 நிமிடங்களின் பின்னர் மாத்தறை நோக்கி வந்து, குறித்த சோதனைச் சாவடியின் அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, இரு பொலிஸ் சார்ஜென்ட்கள் படுகாயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் மரணமடைந்தவர், ஹக்மன பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 36 வயதான, வலஸ்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.
தப்பிச் சென்ற டிப்பர் வாகனத்தில் சாரதியை கைது செய்வது தொடர்பில் ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
from tkn