ஜனநாயகத்தைப் பாதுகாக்க வாக்குகளை பயன்படுத்தவும்

கொரோனா பற்றிய அச்சம் தேவையில்லை; பயமின்றி வெளியே வந்து வாக்களிக்கவும்
மக்கள் அனைவரும் தாம் வாக்களிப்பதை உறுதிப்படுத்துமாறும் தேர்தல் ஆணையர் மஹிந்த தேசப்பிரிய அழைப்பு 

மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருவதால் கொரோனா தொற்று பரவலாமென பயப்படத் தேவையில்லை. சுகாதார நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அதற்காக 1,000 கோடி ரூபா என்ற பெருந் தொகைப் பணத்தை ஒதுக்கியிருப்பதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

வாக்குரிமைபெற்ற ஒவ்வொரு பிரஜையும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க முன்வரவேண்டுமென அழைப்பு விடுத்தார்.

ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அச்சமின்றி அனைவரும் வாக்களிக்க முன்வரவேண்டும்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று நடைபெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் ஆசிரி யர் ஒன்றியப் பிரதிநிதிகளுட னான கலந்துரையாடலின் போதே தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு தெரிவித்தார். கொரோனா தொற்றுப் பரவலை காரணம் காட்டி எவரும் வாக்களிப்பதை தவிர்க்கக்கூடாது. எமது நாடடில் கொரோனா தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சில இடங்களில் ஒன்றிரண்டு பேருக்கு தொற்று ஏற்பட்டபோதும் பெரிய அளவில் தொற்றுப் பரவல் காணப்படவில்லை. தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்களிப்பு நிலையங்களுக்கு மக்கள் பெருந்தொகையினராக வந்தால் கொரோனா தாக்கம் ஏற்படலாமென சிலர் அச்சுறுத்துகின்றனர். ஆனால் அவ்வாறான தாக்கம் எதுவும் ஏற்படாத வகையில் நாம் சுகாதார வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் வலியுறுத்திக்கூறியுள்ளார்.

இது தொடர்பில் அனைத்து ஊடகங்களும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கொரோனா அச்சத்திலிருந்து மக்களை விடுபடச் செய்ய வேண்டும்.மக்கள் வாக்களிக்கத் தவறினால் அது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் மஹிந்த தேசப்பிரிய எச்சரித்தார். தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கு ஊடகங்களின் ஒத்துழைப்பை வலியுறுத்திய ஆணைக்குழுத் தலைவர் பக்கச்சார்பின்றியும், ஒருதரப்பை மட்டும் உயர்த்திப் பிடிப்பதையும் ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். மக்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்படும் விதத்தில் ஊடகங்கள் நடந்து கொள்ளக்கூடாது. தேர்தல் குறித்து மக்கள் அதிருப்தி கொள்ளும்வகையில் தகவல்களை வெளியிடுவதை ஊடகங்கள் முற்றாக தவிர்க்கவேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தார்.

எம்.ஏ.எம். நிலாம்

Fri, 07/10/2020 - 06:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை