நவீட் நவாஸின் பதவிக்காலத்தை நீடித்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் சபை

பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி பயிற்சியாளரான நவீட் நவாஸின் பதவிக்காலம் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான நவீட் நவாஸ், கடந்த 2018ஆம் ஆண்டில் பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்ட பின்னர் அவ்வணி இந்த ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ணத்தினை முதல் தடவையாக வெற்றி கொண்டிருந்தது.

ஐ.சி.சி.இன் கிரிக்கெட் தொடர்களில் சிறந்த பதிவுகள் எதையும் வைக்காத பங்களாதேஷ் அணிக்கு, முதல் முறையாக இளையோர் உலகக் கிண்ணத்தில் வெற்றியினை பெற்றுக்கொடுக்க பயிற்றுவித்தமைக்காகவே நவீட் நவாஸின் பதவிக்காலம் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ணத்தின் போது பங்களாதேஷ் இளம் கிரிக்கெட் அணியின் சூழ்நிலை பயிற்றுவிப்பாளராக (Condition Coach) செயற்பட்ட றிச்சர்ட் ஸ்டோனியரின் பதவிக்காலத்தினையும், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை 2022ஆம் ஆண்டு வரை நீடித்துள்ளதாக தெரிவித்திருக்கின்றது.

“அவர்கள் (நவீட் நவாஸ், றிச்சர்ட் ஸ்டோனியர் ஆகியோர்) சிறந்த வேலையைச் செய்தனர். அவர்கள் குறித்த கிண்ணத்தை உலகக் கிண்ணம் ஒன்று பங்களாதேஷின் கிரிக்கெட் விளையாட்டுக்கு கிடைத்தது போல் பெற்றுத்தந்தனர். எங்களுக்கு அவர்களை எங்களது திட்டத்தின் ஒரு பகுதியாக வைக்கும் திட்டம் முன்னரே இருந்தது. எனவே, நாங்கள் பதவிக்காலத்தினை நீடித்துள்ளோம்.” என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி நவீட் நவாஸ், றிச்சர்ட் ஸ்டோனியர் ஆகியோரின் பதவி நீடிப்பு குறித்து கூறியிருந்தார்.

அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் பயிற்சியாளருக்கான பயிற்சிகளை நிறைவு செய்திருக்கும் நவீட் நவாஸ், இலங்கை அணிக்காக விளையாடியது தவிர்த்து முதல்தரக் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த துடுப்பாட்டவீரராக செயற்பட்ட பதிவுகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மாறுவதற்கு முன்னர் இலங்கையின் இளையோர் கிரிக்கெட் அணி, வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி ஆகியவற்றின் பயிற்சியாளராக செயற்பட்ட அனுபவத்தினையும் நவீட் நவாஸ் பெற்றிருந்தது சுட்டிக்காட்ட வேண்டிய விடயமாகும்.

றிச்சர்ட் ஸ்டோனியர் உள்ளூர் ரி 20 லீக் தொடர்களில் பிரபல்யமாக இருக்கும் கிரிக்கெட் அணிகளுக்கு பயிற்சியாளராக கடமையாற்றிய அனுபவத்தினைக் கொண்டிருக்கின்றார்.

பயிற்றுவிப்பாளர்களின் பதவிக்காலம் நீடிப்பு ஒரு பக்கம் இருக்க, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இளையோர் உலகக் கிண்ணம் வென்ற அணியில் காணப்பட்ட இளம் வீரர்களை விஷேட செயற்திட்டம் ஒன்றுக்குள் உள்வாங்கி எதிர்கால கிரிக்கெட் போட்டிகளுக்காக தயார்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Fri, 07/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை