பல்வேறு கொலைக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரான, 'பபூன்' என அழைக்கப்படும் கிரிஷான் நிலங்க தாபரே என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் செயலாளரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் சந்தேகநபருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, நேற்று (06) பிற்பகல் 7.30 மணியளவில் அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்தாலோககம பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்போது சந்தேகநபரின் வசமிருந்த 3.12 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
26 வயதான குறித்த சந்தேகநபர், அத்துருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
தற்போது வெளிநாட்டிலுள்ள, திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் அங்கொடை லொக்கா மற்றும் லடியா ஆகியோருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டவர் என விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
சந்தேகநபரை இன்றையதினம் (07) கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, அத்துருகிரிய பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
from tkn