பிரெஞ்ச் கிண்ண கால்பந்து பி.எஸ்.ஜி.அணி சம்பியன்

பிரெஞ்ச் கிண்ண கால்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் எடின்னேவை தோற்கடித்து 13-வது முறையாக கிண்ணத்தை கைப்பற்றியது.

பிரான்சில், கழக அணிகளுக்கான பிரெஞ்ச் கிண்ண கால்பந்து போட்டி நடந்து வந்தது. கொரோனா பாதிப்பால் 4 மாதங்களாக தடைப்பட்டிருந்த இந்த போட்டியின் இறுதி சுற்றில் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.)- செயின்ட் எடின்னே அணிகள் நேற்று முன்தினம் இரவு மோதின. 5 ஆயிரத்திற்கும் குறைவான ரசிகர்கள் ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

விறுவிறுப்பான இந்த மோதலில் பி.எஸ்.ஜி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் எடின்னேவை தோற்கடித்து 13-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. பி.எஸ்.ஜி. அணியில் நட்சத்திர வீரர் நெய்மார் 14-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

எடின்னே தலைவர் லோக் பெரின் 31-வது நிமிடத்தில் எதிரணி வீரர் கைலியன் பாப்பேவின் காலை முட்டியால் மிதித்து இடறி விட்டதால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

இதனால் வலது கணுக்காலில் வலியால் துடித்த கைலியன் பாப்பே கண்ணீர் மல்க பாதியிலேயே நடையை கட்டினார்.

இந்த பருவகாலத்தில் மொத்தம் 29 கோல்கள் அடித்தவரான பாப்பே அடுத்த மாதம் நடக்கும் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்இறுதி ஆட்டத்தில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது.

Mon, 07/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை