ஐஸ் வர்த்தகம்; தேடப்பட்ட மதுவரி திணைக்கள அதிகாரி கைது

புத்தளத்தில் இடம்பெற்ற சட்டவிரோத ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மற்றுமொரு மதுவரித் திணைக்கள அதிகாரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சந்தேகநபர் நேற்றிரவு (24) பொலிஸில் சரணடைந்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேகநபர், புத்தளம் மதுவரித் திணைக்களத்தில் பணி புரிந்து வருபவர் என்பதோடு, கடுகண்ணாவையைச் சேர்ந்தவராவர்.

கடந்த 23ஆம் திகதி அதிகாலை, 125 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன், மதுவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் உட்பட 08 பேர் புத்தளம் நகரின் பிரிவுக்கு பொறுப்பான  குற்றத் தடுப்பு  பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவ்வேளையில் குறித்த மதுவரித் திணைக்கள பரிசோதகர் அங்கிருந்ததோடு, பொலிஸாரைக் கண்டதும் தப்பியோடியிருந்தார்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த மதுவரித் திணைக்கள அதிகாரியை  நேற்று சேவையிலிருந்து  பணிநீக்கம் செய்வதற்கு மதுவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Sat, 07/25/2020 - 11:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை