தேசிய விளையாட்டு விழா நடைபெறும் திகதி அறிவிப்பு

46ஆவது தேசிய விளையாட்டு விழா திட்டமிட்டபடி நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, இம்முறை தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்ச்சிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி அமல் எதிரிசூரிய மற்றும் விளையாட்டுத்துறை பணிப்பாளர் ஐ.பி விஜேரத்ன தலைமையில் நாட்டிலுள்ள சகல மாகாணங்களையும் சேர்ந்த விளையாட்டுப் பணிப்பாளர்களுடன் கடந்த 16ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொவிட் – 19 வைரஸ் தொற்று இலங்கையில் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வராத நிலையில் இவ்வருடத்துக்கான தேசிய விளையாட்டு விழாவை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பில் இக்கூட்டத்தின் போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், ஒருசில முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டது.

இதன்படி, தேசிய விளையாட்டு விழாவின் இறுதி அங்கமான மாகாணங்களுக்கிடையிலான போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கான விண்ணப்பப் படிவங்களை இணையத்தளம் வாயிலாக பெற்றுக்கொள்வதற்கான வசதியினை முதல்தடவையாக அறிமுகப்படுத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மாவட்ட மட்ட மற்றும் மாகாண மட்டப் போட்டிகளை எதிர்வரும் அக்டோபர் மாதம் நிறைவடைவதற்கு முன் நடத்தி முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சகல மாகாணங்களையும் சேர்ந்த விளையாட்டுப் பணிப்பாளர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.

வீரர்களின் தொடுகையுடன் சம்பந்தமில்லாத கரம், பெட்மின்டண், கிரிக்கெட், டென்னிஸ், பளுதூக்கல் மற்றும் உடற்கட்டழகர் உள்ளிட்ட போட்டிகள் தேர்தலுக்குப் பிறகு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி, கொவிட் – 19 காரணமாக சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி போட்டி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்பதால் அதிக பணம் செலவாகும் என்பதைக் கருத்திற் கொண்டு வழமையாக ஒதுக்குகின்ற நிதியை விட அதிக பணத்தை சகல மாகாணங்களுக்கும் வழங்கும்படி இதன்போது மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், இதற்கான அனுமதியையும் விளையாட்டுத்துறை அமைச்சு வழங்கியுள்ளது. 

பிரதேச செயலாளர் மட்டத்திலான போட்டிகளை நடத்துவதற்கு ஒரு இலட்சம் ரூபாவும், மாவட்ட மட்டப் போட்டி நிகழ்ச்சிகளுக்காக 2 இலட்சம் ரூபாவும், மாகாண மட்டப் போட்டி நிகழ்ச்சிகளுக்காக 3 இலட்சம் ரூபா பணத்தையும் ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட் – 19 வைரஸை கருத்திற் கொண்டு இம்முறை தேசிய விளையாட்டு விழா நிகழ்ச்சிகளை 3 கட்டங்களாக நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Tue, 07/21/2020 - 09:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை