ஜனாதிபதி, பிரதமர் இருக்கும் வரை தமிழ் மக்களில் கை வைக்க முடியாது

இன்றைய ஆட்சி 15 வருடங்களுக்கு மேல் தொடரும்
காரைதீவு கட்சி அலுவலக திறப்பு விழாவில் கருணா

இன்றைய பிரதமர் மஹிந்தராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரது ஆட்சி இன்னும் 15வருடங்களுக்கு இருக்கும். அவர்கள் இருக்கும் வரை தமிழ் மக்கள் மீது யாரும் கை வைக்க விடமாட்டேன் என   தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணித்தலைவரும் அகில இலங்கை தமிழர் மகாசபை  திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமாகிய கருணா அம்மான் என அழைக்கப்படும்  வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். 

காரைதீவு விபுலாநந்த வீதியில் த.ஐ.சு.முன்னணி தேர்தல் அலுவலகம் திறந்துவைக்கும் நிகழ்வு நேற்று(5)  திகாமடுல்ல மாவட்ட அ.இ.த.மகாசபை வேட்பாளரான காரைதீவைச்சேர்ந்த தியாகராசா ஞானேந்திரம் தலைமையில் நடைபெற்றது. 

அங்குரையாற்றிய கருணா அம்மான் மேலும் பேசுகையில்,  

1958ஆம் ஆண்டு முதல் அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக 22 தமிழர் கிராமங்கள் பறிபோயுள்ளன. இன்று கல்முனையில் தரவைப்பிள்ளையார் ஆலயவீதி கடற்கரைப்பள்ளிவாசல் வீதியாக்கபட்டுள்ளது. பாண்டிருப்பில் செட்டியார்தெரு பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் கைகட்டி பார்த்துக்கொண்டிருந்துவிட்டு இன்று மீண்டும் தேசியம் பேசிக்கொண்டு வருகிறார்கள். 

முன்னாள் எம்.பி. எம்.சி.கனகரெட்ணத்திற்குப்பிறகு வந்த எம்.பிக்கள் அனைவரும் அம்பாறைத் தமிழ்மக்களை தொடர்ந்து ஏமாற்றியே வந்துள்ளனர். தமிழ்மக்களின் காணிகளை சுரண்டிய மாற்றினத்தாரை ஏன் என்றும் கேட்கவில்லை.அவர்களுடன் நல்லுறவு பேசி தங்களை வளப்படுத்திக்கொண்டனரே தவிர மக்களைக்கவனிக்கவில்லை. 

த.தே.கூட்டமைப்பை உருவாக்கியது நானே. ஆனால் சம்பந்தர் ஐயா 'அப்படியில்லை புலிகளால் உருவாக்கப்படவில்லை 'என்று கூறுகிறார். உண்மையில் அக்கட்சி உருவாக்கத்தின்போது அருகில் நானிருந்தேன். இன்றும் உயிருடன்இருக்கிறேன். இதனை எப்படி மறைப்பது?ஆனால் மாவை அண்ணன் அதில் நேர்மைத்தன்மையுடன் செயற்படுகிறார். 

த.தே.கூட்டமைப்பில் அன்று நல்ல தலைவர்கள் இருந்தனர். இன்று மாவையைத் தவிர தரமான தலைவர்கள் இன்றில்லை. சுமந்திரன் வடக்கில் ஒரு கதை தெற்கில் ஒருகதை. அன்ரன் பாலசிங்கத்துடன் அவரை ஒப்பிடுகிறார். அன்ரன் பாலசிங்கத்தின் செருப்புக்கும் இவர் அருகதையில்லை. தமிழர்போராட்டத்தை சர்வதேசத்திற்கு கொண்டு சென்றவர் அன்ரன் பாலசிங்கம். 

அம்பாறை மாவட்ட தமிழ்மக்களது இருப்பைப் பாதுகாத்து பொருளாதாரத்தை வளமாக்குவதே எனது இலட்சியம். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் நான் என்ன செய்தேன்? என்று கேட்கின்றனர். 

அங்கு எனது கையால் 3200 பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கினேன். 1000 பேருக்கு சிற்றூழியர் நியமனம்வழங்கினேன். உயரதிகாரிகள் பலரைப் பாதுகாத்தேன். 300 மாதர்சங்கங்களுக்கு 300 லட்சம் ரூபா வழங்கினேன். 

எழுவான்கரை படுவானகரையை இணைக்கும் மண்முனைப்பாலத்தை கட்டினேன். 50கோடிருபா செலவில் களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலையில் கட்டடம் கட்டினேன். புற்றுநோய் வைத்தியசாலையை மட்டக்களப்பில் கட்டினேன். குடிதண்ணீர் மின்சாரம் என்பவற்றை 90வீதமான மக்களுக்கு வழங்கினேன். இவற்றையெல்லாம் செய்துவிட்டுத்தான் அம்பாறைக்கு வந்துள்ளேன்.

காரைதீவு குறூப் நிருபர் 

Mon, 07/06/2020 - 06:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை