20க்கு20 வரலாற்றில் சிறந்த பந்து வீச்சாளர் லசித் மாலிங்க

20க்கு20 கிரிக்கெட் வரலாற்றில் தோன்றிய சிறந்த வேகப் பந்துவீச்சாளராக லசித் மாலிங்கவை பிரபல விஸ்டன் மாதாந்த கிரிக்கெட் சஞ்சிகை தேர்வு செய்துள்ளது.

வரலாற்றில் தோன்றிய மிகச் சிறந்த 20க்கு20 பந்துவீச்சாளரை தேர்வு செய்வதற்காக விஸ்டன் சஞ்சிகை அண்மையில் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றின்போதே இந்தத் தேர்வு இடம்பெற்றது. இதன்போது பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பின்னரே மாலிங்கவின் பெயர் தேர்வு செய்யப்பட்டது.

CricViz கிரிக்கெட் பகுப்பாய்வு இணையத்தளத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த தேர்வுக்காக அந்த இணையத்தளத்தின் கிரிக்கெட் பகுப்பாய்வாளர் பிரடி வைல்ட் மற்றும் இங்கிலாந்து முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் டைமல் மில்ஸ் பங்கேற்றிருந்தனர்.

கலந்துரையாடலில் பங்கேற்ற பிரடி வைல்ட் 20க்கு20 போட்டிகளில் வேகப் பந்துவீச்சாளர்களின் வலுவான பங்களிப்பு பற்றி கருத்து வெளியிட்டிருந்தார்.

“20க்கு20 போட்டியின் போக்கில் கடினமானது வேகப் பந்துவீச்சு என்று எம்மால் கூற முடியும். அதனால் இந்தத் தேர்வு மிகக் கடினமான ஒன்றாக இருந்தது.

20க்கு20 போட்டியின் போக்கில் மிகவும் பயன்தரக்கூடிய பந்துவீச்சான யோக்கர் பந்து வீசுவதில் மாலிங்கவின் திறன் யாருக்கும் இரண்டாம் பட்சமாவதில்லை. அவர் பந்துவீசும் பாணியின் ஊடாகவே அது அவருக்கு கிடைத்துள்ளது. அந்தத் தனித்துவமான பாணியில் யோக்கர் பந்துகளை இலகுவாக வீசுவதற்கு அவரால் முடிகிறது.

அவருக்கு வேறு எந்த பந்துவீச்சாளரை விடவும் பயன்தரக் கூடியதாக யோக்கர் பந்து வீச முடிவது அவரது வெற்றியாகும். மாலிங்க யோக்கர் பந்துடன் 63 வீதமான சிறந்த பெறுபேறை பெற்று 20க்கு20 போட்டியில் மிக வெற்றிகரமான வீரராகியுள்ளார். அவர் யோக்கர் தவறி புல்டோஸ் பந்து ஒன்றை வீசினாலும் அதற்குக் கூட துடுப்பெடுத்தாடுவது மிகக் கடினம்.

அவர் நீண்ட காலத்தில் பெற்ற அனுபவம் தான் அதன் சுவையான அம்சம் என்று நான் நினைக்கிறேன். அவர் அதிக காலம் பிரபலமான தொழில்சார் வீரர் ஒருவராக விளையாடுகிறார். அவர் எப்போதும் சர்வதேச போட்டிகளான இந்திய ப்ரீமியர் லீக் போட்டி, உலகக் கிண்ணப் போட்டி போன்று மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணியுடன் பிக் பாஷ் போட்டியிலும் விளையாடுகிறார். உலகின் மிகச் சிறந்த யோக்கர் பந்துவீச்சாளராக முடியுமாயின் விவாதத்திற்கு இடமின்றி உலகின் சிறந்த பந்துவீச்சாளராகலாம்” என்று வைல்ட் குறிப்பிட்டார். 1983 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28 ஆம் திகதி காலியில் பிறந்த லசித் மாலிங்க 2004 ஆம் ஆண்டில் இலங்கை தேசிய அணியில் இணைந்தார். தமக்கே உரிய பந்துவீச்சு பாணியை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகம் செய்த அவர் கிரிக்கெட் உலகின் பிரபலமான வீரர் ஒருவராக மாறினார்.

அவரால் உலகின் வலுவான துடுப்பாட்ட வீரர்களையும் தமது யோக்கர் பந்துவீச்சு மூலம் வீழ்த்துவதற்கு முடிந்தது. இது அவர் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது.

இந்திய ப்ரீமியர் லீக், பிக் பாஷ் போன்ற உலகின் பிரபலமான போட்டித் தொடர்களுக்காக அதிக சம்பளத்துடன் பங்கேற்கும் மாலிங்க அந்த அனைத்து போட்டிகளிலும் தமது அதிகாரத்தை செலுத்தி வருகிறார்.

2014 20க்கு20 உலகக் கிண்ண போட்டியில் உப தலைவராக செயற்பட்ட அவர் இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு தலைமை வகித்து இலங்கையின் 18 ஆண்டு கால உலகக் கிண்ண எதிர்பார்ப்பை உண்மையாக்கினார்.

இலங்கை அணிக்காக 84 20க்கு20 போட்டிகளில் ஆடியிருக்கும் மாலிங்க அதில் 107 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 20க்கு20 சர்வதேச போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் மாலிங்க ஆவார்.

20க்கு20 போட்டியில் இரு முறை ஹட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஒரு பந்துவீச்சாளராகவும் சாதனை படைத்துள்ளார். இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு இடையே இடம்பெற்ற போட்டி ஒன்றில் நான்கு பந்துகளுக்குள் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் யாரும் எட்டாத மைல்கல் ஒன்றையும் அவர் தொட்டார்.

லசித் மாலிங்க தவிர இந்த கலந்துரையாடலில் டெல் ஸ்டைன் (தென்னாபிரிக்கா), வஹாப் ரியாஸ் (பாகிஸ்தான்), மிச்சல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா), மொஹமட் அமீர் (பாகிஸ்தான்), ட்வேன் பிராவோ (மேற்கிந்திய தீவுகள்), ஜஸ்பிரித் பூம்ராஹ் (இந்தியா) ஆகிய வீரர்கள் பற்றியும் குறிப்பிட்டு பேசப்பட்டது.

Wed, 07/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை