ஊவா ப்ரீமியர் லீக் ரி-20 தொடர் பற்றி இலங்கை கிரிக்கெட் அறிவிப்பு

அடையாளம் தெரியாத குழு ஒன்றின் மூலம், ஊவா ப்ரீமியர் லீக் ரி 20 தொடர் என்ற பெயரில் நடாத்தப்பட்டதாக கூறப்படும் கிரிக்கெட் தொடருடன் தமக்கு எந்தவித தொடர்புகளும் இல்லை என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் இந்திய ஊடகங்கள் சில நான்கு அணிகள் பங்குபெறும் ரி 20 தொடரொன்று ஜூன் 29ஆம் திகதி தொடக்கம், ஊவா ப்ரீமியர் லீக் ரி 20 தொடர் என்ற பெயரில் இலங்கையின் பதுளை நகரில் நடைபெறப்போவதாக செய்திகள் வெளியிட்டிருந்தன. விடயங்கள் இவ்வாறு இருக்க, இந்த தொடர் பற்றி வெளியிட்ட ஊடக அறிக்கை ஒன்றிலேயே இலங்கை கிரிக்கெட் குறித்த தொடருக்கும் தமக்கும் தொடர்புகள் எதுவும் இல்லை எனத் தெரிவித்திருக்கின்றது.

இந்த தொடர் பற்றி இன்னும் தெளிவுபடுத்தியிருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை, ஊவா ப்ரீமியர் லீக் ரி 20 தொடர் என்ற பெயரில் எந்தவித கிரிக்கெட் தொடர்களும் இலங்கையின் எந்த இடத்திலும் நடைபெறவில்லை என்றும் உறுதியாகக் குறிப்பிட்டிருக்கின்றது.

இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரியான அஷ்லி டி சில்வா, ஊவா ப்ரீமியர் லீக் ரி 20 தொடர் என்ற பெயரில் நடைபெறுவதாக கூறப்படும் கிரிக்கெட் தொடர் பற்றி அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்குமாறு, இலங்கை கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு குழுவிற்கு கட்டளை ஒன்றினைப் பிறப்பித்திருந்தார். இதன்படி, குறித்த ஊழல் தடுப்புக் குழு இந்த தொடர் பற்றி விசாரணைகளை மேற்கொண்ட போது ஊவா ப்ரீமியர் லீக் ரி 20 தொடர் என்ற பெயரில் எந்தவித கிரிக்கெட் தொடர்களும் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

ஆனால், இந்த கிரிக்கெட் தொடரின் முதல்நாளில் (அதாவது ஜூன் 29ஆம் திகதியில்) தொடரில் பங்குபெறுவதாக கூறப்பட்ட மொனராகல ஹோர்னட்ஸ், மஹியங்கன யுனிலேன்ஸ், வெல்லவாய வைபர்ஸ், பதுளை சீ ஈக்ள்ஸ் ஆகிய நான்கு அணிகள் விளையாடிய போட்டிகளின் ஓட்ட விபரங்களும் இந்திய ஊடகங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த கிரிக்கெட் தொடர் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் இலங்கை கிரிக்கெட் சபை, இவ்வாறான போலி கிரிக்கெட் தொடர்கள் மூலம் தமது நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுட்டிக் காட்டியுள்ளது.

Fri, 07/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை