அங்குலானை சம்பவம்; 14 பேர் கைது

- பொலிஸார் 08 பேருக்கு காயம்

அங்குலானை பொலிஸ் நிலையத்திற்கு கல் வீச்சு தாக்குதலை நடத்தியமை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் 08 பேருக்கு காயம் ஏற்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டில் 14 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண்கள் 09 பேரும், ஆண்கள் 05 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்றையதினம் (17) மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

நேற்று (16), அங்குலானை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து, அங்கு பொலிஸாரால் கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

அண்மையில் மொரட்டுவை, லுனாவ பிரதேசத்தில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் ஒருவர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, குறித்த பிரதேசத்தில் உள்ள மக்கள் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் பொலிஸ் நிலையம் மீது கற்களை வீசியதாகவும், அதனை தொடர்ந்து அவர்களை கலைக்க கண்ணீர் புகை வீச்சை மேற்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (16) மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றதோடு, இது தொடர்பான விசாரணையை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டார்.

அதன் பின்னர், பிற்பகல் இரண்டு முப்பது மணி அளவில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் உறவினர்கள் உள்ளிட்ட சுமார் 75 - 100 பேர் அங்குலானை பொலிஸ் நிலையம் முன்பாக தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸ் நிலையத்திற்கு கற்களை வீசியதாகவும் இதில் பொலிஸ் நிலைய பெயர் பலகை மற்றும் ஜன்னல்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின்போது, கடமையில் இருந்த குறித்த பொலிசார் போதையில் இருந்ததாக, சம்பவத்தின்போது உடனிருந்த மரணித்தவரின் சகோதரர் தெரிவித்துள்ளார். இதன்போது அவர்களுடன் வந்த மரணித்தவரின் மகனான சிறுவன் ஒருவன் மீதும் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாகவும் அச்சிறுவன் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும், அவர் தெரிவித்திருந்தார்.

Fri, 07/17/2020 - 09:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை