தேர்தல் பிரசாரங்கள் ஆகஸ்ட் 02 நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு

தேர்தல் முடிவு வெளியாகி 07 நாட்களுக்கு பேரணிகளுக்கு தடை

பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் ஆகஸ்ட் 2 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு செய்யப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.  

பாராளுமன்ற தேர்தலுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகளின் போது அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குவிதிகள் தொடர்பான விசேட அறிவித்தலொன்று பொலிஸ் தலைமையகத்தினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளதுடன் அந்த அறிவித்தலிலேயே இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.  

அந்த அறிவித்தலின் பிரகாரம் ஆகஸ்ட் 2ஆம் திகதி நள்ளிரவுடன் பிரசார நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதுடன் தேர்தல் முடிவுகள் வெளியாகி 7 நாட்களுக்கு எந்தவொரு பேரணியையும் நடத்த முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வீடுவீடாக சென்று பிரசார நடவடிக்கையில் ஈடுபடும் போது வேட்பாளர் மற்றும் வேட்பாளரின் குடும்பத்தினருக்கு செல்ல முடியாது என்பதுடன் அவ்வாறாக வேட்பாளர் ஒருவருக்காக 3 பேர் மாத்திரமே வீடு வீடாக செல்ல முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் , அரசியல் கட்சிகளின் மற்றும் சுயேட்சை குழுக்களின் கொள்கை பிரகடனங்கள், சின்னம், புகைப்படம், துண்டுபிரசும், இலக்கம் மற்றும் போஸ்டர் போன்றவற்றை வீடுகளுக்கு விநியோகிக்க முடியும். ஆனபோதும் அவற்றை வீதியில் பயணிக்கும் போது காட்சிப்படுத்தவோ வீட்டாருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வதற்கோ தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீட்டுக்கு வீடு செல்லும் போது ஒலி பெருக்கிகள் மற்றும் இசை கருவிகள் பயன்படுத்தக் கூடாது. விருப்பு இலக்கம் , சின்னம் ஆகியன உள்ளடங்கிய ஆடைகளும் அணிந்துக்கொண்டும் இந்த நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது. எனவும் ஆறிவிக்கப்பட்டுள்ளது. 

Thu, 07/09/2020 - 04:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை