SLPP தேர்தல் பிரசாரம் ஜூலை 03 இல் ஆரம்பம்

 நாடு தழுவிய ரீதியில் கூட்டங்கள் – செயலர் சாகர

ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்து கொள்ளும் பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஜூலை 3ஆம் திகதி முதல் நாடு தழுவிய ரீதியில் நடைபெறும்.

ஜனாதிபதியின் கொள்கைத்திட்டங்களை செயற்படுத்தும் பலமான அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் மக்கள் கவனம் செலுத்தவேண்டும் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.  பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதாரத்தை முன்னேற்றும் சிறந்த திட்டங்களை வகுத்தே பொதுஜன பெரமுன தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளது.

தேசிய உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்குவது அரசாங்கத்தின் கொள்கையாக காணப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பொதுஜன பெரமுன வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம் முழுமைப்படுத்தப்பட வேண்டும். சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் பிரசார கூட்டங்கள் இடம்பெறும்.

ஜனாதிபதியின் கொள்கைகளை செயற்படுத்தும் அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும் என்பதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.

ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட கட்சி பாராளுமன்றத்தில் நிலையான அரசாங்கம் அமைப்பது அவசியமாகும் என்றார்.

 

Tue, 06/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை